கோத்தா பாரு, 03 அக்டோபர் (பெர்னாமா) -- கடந்த வாரம் கிளந்தான் பாசிர் பூத்தேவில் நிகழ்ந்த கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு, பெண் ஒருவர் உட்பட எண்மரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று அதிகாலை, கோத்தா பாரு, பாச்சோக், பாசிர் பூத்தே மற்றும் தும்பாட் ஆகிய ஆறு இடங்களில் நடத்தப்பட்ட வெவ்வேறு சோதனைகளில் 20 முதல் 46 வயதுக்கு உட்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
செப்டம்பர் 26-ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவத்தில், கடத்தப்பட்டவர் பாசிர் பூத்தே செராங் ருகு பகுதியில் உள்ள எண் இல்லாத ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் யூசோப் மாமாட் தெரிவித்தார்.
மேலும், கடத்தலில் ஈடுபட்டவர் பாதிக்கப்பட்டவரின் முதலாளியிடமிருந்து ஒரு லட்சத்து 50,000 ரிங்கிட் பிணைப்பணம் கோரியதாகவும் அவர் கூறினார்.
வியாழக்கிழமை அதிகாலை மணி 2 முதல் காலை மணி 11.30 வரை கிளந்தான் குற்றப் புலனாய்வுத் துறை மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் கடத்தப்பட்டவர் மீட்கப்பட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)