புத்ராஜெயா, 07 ஜூலை (பெர்னாமா) - ஏழை எளிய, குறைந்த வருமானம் பெறக் கூடிய தோட்டத் தொழிலாளி மக்களுக்கு அரசாங்க உதவிகள் கிடைக்க பெறும் மாபெரும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.
மத்திய, மாநில அரசு மக்களுக்கு உதவிகளை ஒருங்கிணைகும் e-kasih தரவு தளத்தில் தோட்டப் பாட்டாளி மக்கள் பதிவு செய்து கொள்வது கடந்த 2007ஆம் ஆண்டு முதல் மறுக்கப்பட்டு வந்துள்ளது.
மலேசியாவை செழிப்பான நாடாக உருவெடுக்கச் செய்ததில் தோட்டப் புறங்களில் வாழ்ந்துவரும் இந்திய பாட்டாளி மக்களுக்கு பெரும் பங்கு உண்டு.
ஆனால், அரசு உதவிகளை பெறும் விவகாரத்தில் அவர்கள் ஓரங்கட்டப்பட்டது சமூக அநீதியாகவே கருதப்படுகிறது.
இதனை தொடர்ந்து, பிரதமர் துறையின் கீழ் இயங்கும் e-kasih தரவு தளத்திற்கு பொறுப்பேற்க கூடிய ஐசியூ பிரிவுடன் கலந்து பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கும் தலைவர்கள் கிராமங்களை தத்தெடுக்கும் Santuni Madani எனும் திட்டத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அந்த வகையில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள புக்கிட் தாகார், மேரி ஆகிய தோட்டங்களை தாம் தத்தெடுத்ததாக செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
தாம் தத்தெடுத்த தோட்டங்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள தோட்ட மக்களும் e-kasih-வில் தங்களை பதிவு செய்துக் கொள்ள தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்துடனும் தாம் கலந்து பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)