மஞ்ஜோங், 07 ஜூலை (பெர்னாமா) -- நேற்றிரவு, பேராக், மஞ்ஜோங் நகராண்மை மன்ற அரங்கில் நடைபெற்ற, லெஜெண்ட் ஆல் ஸ்டார் நான்கு முனை காற்பந்து போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்த பினாங்கு எஃப்.சி அணியின் கோல் காவலரான ஃபிரோஸ் முஹமட் உயிரிழந்தார்.
அதனை தனது சமூக ஊடக அறிக்கையின் மூலம் பினாங்கு எஃப்.சி அணி உறுதிபடுத்தியது.
மயங்கி விழுந்த ஃபிரோஸ் முஹமட் உடனடியாக மஞ்ஜோங் கே.பி.ஜே மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.
எனினும், அவர் உயிரிழந்தது இரவு மணி 10.15-க்கு உறுதிபடுத்தப்பட்டது.
கெடா ஃபிரோஸ் முஹமட் அணியுடன் மோதிக் கொண்டிருந்த ஃபிரோஸ் திடீரென மயங்கி விழுந்த காணொளி முன்னதாக சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
நாட்டின் நான்கு வட மாநிலங்களான பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் பேராக்கின் காற்பந்து அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன.
1990-ஆம் ஆண்டுகளில் நாட்டிலும் பினாங்கு மாநிலத்திலும் சிறந்த கோல் காவலர்களில் ஒருவராக ஃபிரோஸ் நினைவுகூரப்படுகிறார்,
அதோடு, மலேசிய காற்பந்தரங்கில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த ஆட்டக்காரராகவும் அவர் திகழ்ந்தார்.
இச்சம்பவம் குறித்து அதிகாரத் தரப்பு எந்தவோர் அதிகாரப்பூர்வ அறிக்கையையும் இதுவரை வெளியிடவில்லை.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]