Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

பாரம்பரிய விளையாட்டுகளை மறக்கடிக்கிறது இணைய விளையாட்டு

28/06/2025 08:15 PM

கோலாலம்பூர், 28 ஜூன் (பெர்னாமா) -- ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என்று மகாகவி பாராதி பாடிய காலங்கள் மெல்ல மெல்ல மறையும் வேளையில், இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டுகளும் மறக்கடிக்கப்பட்டு வருகின்றன.

பள்ளிகளைத் தவிர, பிள்ளைகள் வெளியே ஓடி விளையாடுவதை காட்டிலும், வீட்டில் இணைய விளையாட்டில் அதீத ஆர்வம் செலுத்தி வருவது கொவிட்-19 தாக்கத்திற்கு பிறகு அதிகமாகிவிட்டது.

இயங்கலை வகுப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி, விவேக தொலைபேசியின் பயன்பாடு போன்றவை, இன்று வீடுகளில் பதின்ம வயதினர் மட்டுமின்றி சிறார்களையும் இணைய விளையாட்டுகள் மூலம் முடக்கும் நிலையில், அதன் நன்மை தீமைகளை கண்டறிந்தது, பெர்னாமா செய்திகள்.

உடல்திறன், ஆரோக்கியம் மற்றும் விளையாட்டுகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஆண்டுதோறும் விளையாட்டு தினம் கொண்டாப்படுகின்றது.

ஆனால், அந்த விழிப்புணர்வின்றி, இணைய விளையாட்டில் அதீத ஆர்வம் என்பது வளர்ந்து வரும் பிரச்சனை என்று, விளையாட்டுத்துறை மனோவியல் நிபுணர் முனைவர் அண்ணாதுரை இரங்கநாதன் கூறுகின்றார்.

அதேவேளையில், திரி திரி பந்தம், கண்ணாமூச்சி, பம்பரம் விடுதல், பல்லாங்குழி போன்ற சாதாரண பாரம்பரிய விளையாட்டுகளும் இன்று வீடுகளில் மறக்கப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இணைய பயன்பாடு காலத்தின் கட்டாயம் என்றாலும், கலாச்சார கட்டாயத்தையும் சமுதாயம் மறக்காமல் பாரம்பரிய விளையாட்டுகளை வளரும் தலைமுறைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்று முனைவர் அண்ணாதுரை கூறினார்.

இன்றைய நவீன காலக்கட்டத்தில் இந்த விளையாட்டுகள் அவசியமா என்று கேட்பவர்களுக்கு அவர் பதில் அளித்தார்.

பிள்ளைகளை வீட்டில் கட்டுப்படுத்த, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, நேரமின்மை காரணங்களுக்கு துணை செய்ய, கல்வி சார்ந்த போட்டிகளில் பங்கு பெற இணைய விளையாட்டுகள் பெரும்பாலும் கைகொடுத்து விடுவதாக பொது மக்களில் சிலர் கருத்துரைத்தனர்.

ஆனாலும், அதில் பாதகம் இருப்பதையும் அவர்கள் மறுக்கவில்லை.

வெளியில் செல்வதற்கு எப்போது தடை வந்ததோ, அப்போதே கைகளில் இணையம் சேர்ந்து அதன் விளையாட்டுகளின் வழி பிள்ளைகளின் உலகைச் சுருங்கச் செய்து விட்டது.

2018-ஆம் ஆண்டில், அனைத்துல நோய்களின் வகைப்பாட்டில் இணைய விளையாட்டால் வரும் பாதிப்பையும் உலக சுகாதார நிறுவனம் இணைத்துள்ளதால்...

பெற்றோர்கள், பிள்ளைகளின் எதிர்காலத்தையும் அவர்களின் ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)