புத்ராஜெயா, 25 ஜூன் (பெர்னாமா) - பல்வேறு குற்றங்களுக்காக அதிக எண்ணிக்கையிலான அபராதங்களைக் கொண்டுள்ள கனரக லாரிகள் மற்றும் விரைவுப் பேருந்துகளை நிர்வகிக்கும் நிறுவனங்களின் பட்டியலை போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ளது.
சாலைச் சட்டங்களுக்கு இணங்குவதை அதிகரிக்கும் வகையில், நிர்வகிப்பு நிறுவனங்களுக்கு ஓர் எச்சரிக்கையாகவும் நினைவூட்டலாகவும் இக்கடுமையான நடவடிக்கை அமையும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
"அவர்கள் மாற வேண்டும் என்பதற்காக நாங்கள் ஓர் எச்சரிக்கையை விடுக்கிறோம். முதலாவது, அவர்களிடம் ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். இரண்டாவது மற்றும் மிக முக்கியமானது என்னவென்றால், அனைத்து இயக்க நிறுவனங்களும் தங்கள் நிறுவனங்களில் பாதுகாப்பு கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் என்பதை இந்த அணுகுமுறையின் மூலம் நாங்கள் நினைவூட்டுகிறோம். இது ஓர் எச்சரிக்கையாக உள்ளது. அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒருபடி. ஒரு பாடம்," என்றார் அவர்.
இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் லோக் அதனைக் கூறினார்.
இன்னும் நிலுவையில் உள்ள 22,017 அபராதங்களை KDEB Waste Management நிறுவனம் கொண்டிருக்கும் நிலையில், 540 அபராதங்களுடன் Bas Ekspress நிர்வகிப்பு நிறுவனம் மிக அதிக அபராதங்களைக் கொண்ட நிறுவனமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள அனைத்து சம்மன்களையும் சம்பந்தப்பட்ட அந்த நிறுவனங்கள், அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 14 நாட்களுக்குள் மாநில ஜேபிஜே அலுவலகம் அல்லது கிளைகளில் செலுத்த வேண்டும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)