புத்ராஜெயா, 7 ஜூன் (பெர்னாமா) -- தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே, ஜூன் 14-ஆம் தேதி நடைபெறவிருக்கும் எல்லை தொடர்பான பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவுகளைப் பின்பற்ற மலேசியா தயாராக இருப்பதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளையும் உள்ளடக்கிய எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தாய்லாந்து மற்றும் கம்போடியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும், 2025 ஆசியான் தலைவராக பொறுப்பு வகிக்கும் மலேசியா, ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
''நான் இரு பிரதமர்களிடமும் (தாய்லாந்து மற்றும் கம்போடியா) பேசினேன். நாம் ஆதரிக்கும் பல நடவடிக்கைகளை அவர்கள் எடுத்துள்ளனர். அதாவது ஜூன் 14-ஆம் தேதி தாய்-கம்போடிய எல்லை தொடர்பான பேச்சுவார்த்தைகள். தேவையான ஒத்துழைப்பைப் பின்பற்றவும் வழங்கவும் நான் தயாராக இருக்கிறேன். இதுவரை, இரு அரசாங்கங்களும் பேச்சுவார்த்தைகளை இணக்கமாகத் தொடரும் நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளன,'' என்று அவர் தெரிவித்தார்.
தியாகத் திருநாளை முன்னிட்டு, புத்ரா பள்ளிவாசலில் மேற்கொண்ட தொழுகைக்குப் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
கடந்த மே 28ஆம் தேதி, தாய்லாந்து - கம்போடியா எல்லையில் அவ்விரு நாடுகளின் இராணுவப் படைகள் மோதலில் ஈடுபட்டன.
இச்சம்பவத்தில், ஒரு கம்போடிய ராணுவ வீரர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)