Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

86,086 மின்னியல் சிகரெட் & 996.5 லிட்டர் வேப் திரவத்தை சுங்கத்துறை கைப்பற்றியது

05/06/2025 06:33 PM

பட்டர்வொர்த், 05 ஜூன் (பெர்னாமா) -- கடந்த ஏப்ரல் மாதத்தில் மேற்கொண்ட இரு சோதனை நடவடிக்கைகளில், 86 ஆயிரத்து 86 மின்னியல் சிகரெட்டுகளுடன், 51 லட்சட்து 70 ஆயிரம் ரிங்கிட் மதிப்புடைய 996.5 லிட்டர் வேப் திரவத்தையும், பினாங்கு அரச மலேசிய சுங்கத் துறை J-K-D-M, பறிமுதல் செய்தது.

வட பட்டவொர்த் துறைமுகம், NBCT-யில் ஒரு கொள்கலனிலும், கிள்ளான் துறைமுகத்தில் உள்ள ஒரு கொள்கலனிலும் நடத்தப்பட்ட சோதனைகளில், சீன நாட்டவர் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக ரொஹாய்சட் அலி தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி பிற்பகல் மணி 1.15-க்கு நடத்தப்பட்ட முதல் சோதனையில், அமலாக்கப் பிரிவின் செயல்பாட்டுப் பிரிவு, சீனாவிலிருந்து NBCT-யில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கொள்கலனை சோதனை செய்ததாக ரொஹாய்சட் அலி கூறினார்.

"இச்சோதனை நடவடிக்கைகளில் 14,200 மின்னியல் சிகரெட் அல்லது வேப் சாதனங்களும், 210 வேப் திரவங்களும் இறக்குமதியின் போது மற்ற பொருட்களுடன் சேர்த்து அறிவிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. இப்பொருட்களின் மதிப்பு 13 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மொத்த மதிப்பிடப்பட்ட வரியாக இரண்டு லட்சத்து ஐயாயிரத்து 400 ரிங்கிட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது," என்றார் அவர்.

பறிமுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து, இதன் முகவராகச் செயல்பட்ட உள்நாட்டு ஆடவர் ஒருவரும், பொருட்களை ஏற்றுமதி செய்பவராக நம்பப்படும் 30 வயதுடைய சீனர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, சம்பந்தப்பட்ட கொள்கலனில் நெகிழிப் பொருட்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

சோதனைக்குப் பின்னரே, கொள்கலனில் இருந்த மற்ற பொருட்களுடன் அவை சேர்த்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதாக ரொஹாய்சட் குறிப்பிட்டார்.

1967-ஆம் ஆண்டு சுங்கத்துறை சட்டம், செக்‌ஷன் 133(1)(a)-இன் கீழ் இவ்விரு வழக்குகளும் விசாரிக்கப்படுகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)