Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பெண் 2.0 திட்டம்; கூடுதலாக 5 கோடி ரிங்கிட் நிதி - கடன் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்

03/06/2025 06:33 PM

டாமன்சாரா, 03 ஜூன் (பெர்னாமா) - இந்திய பெண்களை வர்த்தக ரீதியில் தொழில்முனைவோராக உயர்த்தும் PENN திட்டத்தின் மூலம், கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ஐந்து கோடி ரிங்கிட் நிதியில் இதுவரை நான்கு கோடியே 27 லட்சம் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் வழி ஆறாயிரம் பெண்கள் பயன் பெற்றுள்ளனர்.

அமானா இக்தியார் மலேசியா AIM-இன் கீழ் முன்னெடுக்கப்பட்ட இம்முயற்சிக்கு கிடைத்த வெற்றியின் பலனாக இவ்வாண்டு தொடரப்பட்டுள்ள PENN 2.0 திட்டத்திற்கு மேலும் ஐந்து கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

போதுமான தகுதியும் ஆவணங்களும் உடைய மகளிர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நிதி பெறுவதற்கு விண்ணப்பிக்குமாறு டத்தோ ஶ்ரீ ரமணன் கேட்டுக் கொண்டார்.

இந்தியப் பெண்களுக்கென்று பொதுவான முறையில் இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டுகளில் இந்நிதிக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொண்டவர்களும், இம்முறை தடையின்றி விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

''இந்த உதவி நிதியை இதற்கு முன்னர் பெற்று பலனடைந்தவர்களும் இந்நிதியை மீண்டும் பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். நாடு தழுவிய அளவில் உள்ள 124 ஏஐஎம் கிளைகளில் அவர்கள் இந்நிதி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். எந்த கிளைக்குச் சென்றாலும் அவர்களுக்கு போதுமான ஆலோசனைகள் வழங்கப்படும்,
'' என்று ரமணன் குறிப்பிட்டார்.

விண்ணப்பவர்களுக்கு போதுமான ஆவண தகுதிகள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வர்த்தக நிதியுதவி வழங்கப்படும் என்று ரமணன் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த நிதியுதவியைப் பெற்றுக் கொண்டவர் சிலரின் வளர்ச்சியை அவர் சுட்டிகாட்டினார்.

''பிரேமா மற்றும் சலெஹாவைக் குறிப்பிட்டு பேச நான் விரும்புகிறேன். பிரேமா என்பவர் தனது வர்த்தகத்தஒ தொடங்கிய போது மாதத்திற்கு ஈராயிரம் முதல் மூவாயிரம் ரிங்கிட் வரை மட்டுமே ஈட்டி வந்தார். ஆனால் இத்திட்டத்தில் இணைந்து முறையாக ஆலோசனை பெற்றதன் பேரில் தற்போது மாதத்திற்கு 15,000 வரையில் அவரால் பொருளீட்ட முடிகிறது,'' என்று ரமணன் கூறினார்.

வர்த்தகத்தில் ஈடுபட பெரும்பாலான பெண்களுக்கு ஆர்வம் இருந்தாலும், முதலீடு இல்லாமல் போவதால் பலர் அந்த எண்ணத்தை கைவிடுகின்றனர்.

அத்தகையோர் அமானா இக்தியாரின் ''பெண்' திட்டத்தை விண்ணபித்தால், அவர்களின் கனவு  நனவாகும் என்று வெற்றி பெற்ற சிலர் தெரிவித்தனர். 

இன்று, சிலாங்கூர், டாமன்சாராவில் உள்ள அமானா இக்தியார் மலேசியா AIM தலைமையகத்தில் PENN 2.0 தொடக்க விழா நடைபெற்றது.
 
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)