கோலாலம்பூர், 03 ஜூன் (பெர்னாமா) -- MMM எனப்படும் மலேசிய ஊடக மன்றம் தொடர்பிலான அண்மைய நிலவரங்கள், வரும் ஜூன் 14-ஆம் தேதி, தேசிய ஊடகவியலாளர் தினம், ஹவானா கொண்டாட்டத்தின் போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பது, நியாயமான மற்றும் பொறுப்பான செய்திகளை உறுதி செய்வது உட்பட, ஊடகங்களுக்கு எதிரான புகார்களை சரியான முறையில் பொதுமக்கள் அளிப்பதற்கான தளமாகச் செயல்படுவது என்ற தெளிவான குறிக்கோள்களுடன் MMM உருவாக்கப்பட்டதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
''அதன் உருவாக்கம் குறித்த 50 ஆண்டுகளுக்கும் மேலான விவாதங்களுக்குப் பிறகு, நமது நாடு இறுதியாக மலேசிய ஊடக மன்றத்தை நிறுவுவதில் வெற்றி பெற்றுள்ளது. அச்சு, ஒளிபரப்பு மற்றும் இலக்கவியல் ஊடகங்கள் உட்பட அனைத்து வகையான ஊடகங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு சுய ஒழுங்குமுறை அமைப்பு அது. ஜூன் 14-ஆம் தேதி அது தொடர்பிலான நற்செய்தியை அறிவிப்போம்,'' என்றார் அவர்.
மலேசிய ஊடக மன்றம் உட்பட பல முயற்சிகளின் வழி, மலேசிய ஊடகங்களின் எதிர்காலத்திற்கான உறுதியான அடித்தளத்தை அரசாங்கம் அமைத்து வருவதாக ஃபஹ்மி மேலும் கூறினார்.
இன்று, கோலாலம்பூர், விஸ்மா பெர்னாமாவில் நடைபெற்ற 2025 ஹவானா ஆதரவாளர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் அதனைக் குறிப்பிட்டார்.
இதனிடையே, பெர்னாமாவின் MOTORHOME-BERNAMA எனும் இடமாற்ற சேவை அரங்கத்தையும் ஃபஹ்மி இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)