கோலாலம்பூர், 01 ஜூன் (பெர்னாமா) - இரத்த அழிவுச் சோகையான தலசீமியா நோய் தொடர்பில் நோயைக் கண்டறிதல் சிகிச்சை, தடுப்பு மற்றும் மரபணு ஆலோசனையின் முக்கியத்துவம் ஆகியவற்றை உட்படுத்திய ஐந்து முக்கிய ஆவணங்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட அந்த அனைத்து ஆவணங்களும், தலசீமியா நோய் தொடர்பான தடுப்பு மற்றும் சிகிச்சையை வலுப்படுத்துவதில் சுகாதார அமைச்சின் உறுதிப்பாட்டை நிரூபிப்பதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.
2024 முதல் 2030-ஆம் ஆண்டுக்கான தேசிய
தலசீமியா கட்டுப்பாடு மற்றும் தடுப்பு திட்டத்திற்கான, வியூகத் திட்டமும் செயல்திட்டமும், 2022 முதல் 2023-ஆம் ஆண்டுக்கான மலேசிய
தலசீமியா பதிவேட்டின் அந்நோய்க்கான மருத்துவ நடைமுறை வழிகாட்டுதல்கள் நிர்வகிப்பின் இரண்டாம் பதிப்பு, 2017 தொடங்கி 2021ஆம் ஆண்டு வரைக்குமான ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பில் தேசிய தலசீமியா பரிசோதனைத் திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள், அறிக்கை மற்றும் நான்காம் படிவம் 4 மாணவர்களுக்கான
தலசீமியா பரிசோதனைத் திட்டம் ஆகியவையே அந்த முக்கிய ஆவணங்களாகும்.
பரம்பரை நோயாகக் கருதப்படும் தலசீமியாவுக்கான சிகிச்சை செயல்முறைக்கு, நீண்ட கால அவகாசம் தேவைப்படும் என்பதோடு அது மிகவும் சிக்கலானது என்று கூறிய அவர், இதற்கான சிகிச்சைக்கு 27 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் வரை தேவைப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.
தொடக்கக்கட்ட பரிசோதனை, மரபணு சுகாதார கல்வி மற்றும் ஆலோசனை சேவைகளில் ஈடுபடுவதன் மூலம் இந்நோயைத் தடுக்க முடியும் என்று Dr Dzulkefly கூறினார்.
பதிவுகளின் அடிப்படையில், இதுவரையில் எலும்பு மஞ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மூலம் 212 தலசீமியா நோயாளிகள் வெற்றிகரமாக குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
வெறும் கொள்கை அளவிலான தேவைகளை மட்டும் இம்முயற்சி பூர்த்தி செய்யாமல், செலவு, சேமிப்பு உத்திகள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வை உறுதி செய்வது ஆகியவற்றிலும் சமூக ரீதியாக முக்கிய பங்கு வகிக்கின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)