கோலாலம்பூர், 31 மே (பெர்னாமா) -- இதனிடையே, அம்னோவில் இருந்து பதவி விலகி, தமது தனிப்பட்ட கருத்துக்கு நெருக்கமான அரசியல் திசையைத் தேர்ந்தெடுக்க நினைக்கும் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸின் முடிவிற்கு மதிப்பளிப்பதாக அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் கூறியுள்ளார்.
அதிகரித்து வரும் பொது அரசியல், இயக்கவியலின் ஒரு பகுதியாக இருப்பதால், இவ்விவகாரத்தை வழக்கத்திற்கு மாறானதாகவும் ஆச்சரியமானதாகவும் தாம் கருதவில்லை என்று அவர் தெரிவித்தார்.
பயணிக்கும் பாதையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொரு தனிநபருக்கும் உண்டு.
அதோடு, கட்சியின் பலத்தை மீண்டும் கட்டியெழுப்புவது உட்பட மக்களின் நலன்களுக்காக போராடுவதில் கவனம் செலுத்தி அம்னோ தொடர்ந்து முன்னேறும் என்று வெளியுறவு அமைச்சருமான டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் கூறினார்.
அதேவேளையில், அம்னோ கட்சியின் சார்பாக அரசாங்கத்தில் பணியாற்றிய காலம் முழுவதும், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு சஃப்ருல் வழங்கிய பங்களிப்பிற்கு, முஹமட் ஹசான் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
எந்தவொரு தனிநபரையும் சார்ந்திருக்காத அம்னோ, அதன் பெயர் மற்றும் பதவியை அடிப்படையாகக் கொண்டு, மக்களின் நலன், போராட்ட உணர்வு மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும் என்று அவர் விவரித்தார்.
தொழிநுட்ப வல்லுநராக இருந்த தெங்கு சஃப்ருல் பொருளாதாரம் மற்றும் நிதி துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதாக அவர் பாராட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502