கோலாலம்பூர், 31 மே (பெர்னாமா) -- வாசிப்பிற்கு இணையத்தை அதிகம் நாடும் இந்தக் காலக்கட்டத்தில், புத்தகக் கண்காட்சிக்கு வரும் மக்களின் எண்ணிக்கையிலும் குறைவில்லை.
இம்மாதம் மே 23ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் முதலாம் தேதி வரை நடைபெறும் 2025ஆம் ஆண்டுக்கான கோலாலம்பூர் அனைத்துலக புத்தகக் கண்காட்சி PBAKL-இல், பெருமளவில் மக்கள் வருகை தருவது புத்தகத்தை வாசிக்கும் பழக்கம் இன்னும் மக்களிடையே நிலைத்து இருப்பதைக் காட்டுகிறது.
42ஆவது முறையாக நடத்தப்படும் PBAKL கண்காட்சியில் கல்வி, இலக்கியம், அறிவியல் கதைகள், நாவல், வாழ்வியல் உட்பட பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்களும் விற்கப்பட்டன.
இந்தக் கண்காட்சியில் பல்வேறு நிறுவனங்களின் ஆயிரத்து 172 முகப்புகளை திறக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை வாங்கிச் செல்வதை பெர்னாமா தொலைக்காட்சி மேற்கொண்ட கண்ணோட்டத்தில் காண முடிந்தது.
அனைத்து இனத்தவர்களும் கலந்து கொள்ளும் இந்தக் கண்காட்சியில் இந்திய சமுதாயத்தில் புகழ்பெற்ற பதிப்பகமான ஜெயபத்தியின் முகப்பும் இடம் பெற்றிருந்தது.
PBAKL தொடங்கிய காலத்தில் இருந்து, ஒவ்வோர் ஆண்டும் முகப்பை திறக்கும் ஒரே தமிழ் பதிப்பகம் என்ற பெருமையைக் கொண்டிருக்கும் ஜெயபத்தி, மக்களுக்காக குறிப்பாக மாணவர்களுக்கான புத்தகங்களை விற்பனை செய்வதாக அதன் முகப்பின் நிர்வகிப்பாளர் பார்கவி செல்வராஜூ தெரிவித்துள்ளார்.
''இது பொதுவாக நடக்கும் கண்காட்சி என்பதால், தமிழ் புத்தகங்கள் மட்டுமல்லாது ஆரம்பப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மற்றும் தேசியப் பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்களையும் விற்பனை செய்கிறோம். மலாய், ஆங்கிலம் கதை புத்தகங்கள், நாவல்கள் என்று பல புத்தகங்கள் உள்ளன. நிறைய பேர் பயிற்சி புத்தகங்களை வாங்குகின்றனர். தன்முனைப்பு புத்தகங்களை மூன்று மொழிகளிலும் விற்பனை செய்கிறோம்,'' என்றார் அவர்.
இதனிடையே, தொழில்நுட்ப வளர்ச்சியினால் E BOOK போன்ற வசதிகள் இருந்தபோதிலும், கையில் புத்தகத்தை எடுத்து படிப்பதில் தனி மகிழ்ச்சி இருப்பதாக கண்காட்சிக்கு வருகை புரிந்த சிலர் கூறுகின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்களை வாங்குவதற்கு இதுபோன்ற புத்தகக் கண்காட்சிகள் பயனளிக்கிறது என்றக் கருத்தும் முன் வைக்கப்பட்டது.
அனைத்து வயதினரையும் கவர்ந்திருக்கும் இக்கண்காட்சியில் மாணவர்களும் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களைத் தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
கோலாலம்பூரில், உலக வாணிப மையத்தில் நடைபெறும் இந்தப் புத்தக கண்காட்சி காலை மணி 10 தொடங்கி இரவு மணி 10 வரை மக்களுக்காக திறந்திருக்கும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502