தோக்கியோ, 31 மே (பெர்னாமா) -- 2027 லிருந்து 2030 வரையிலான கூட்டத்திற்கு அனைத்துலக தொலைத்தொடர்பு ஒன்றியம், ITU மன்றத்தில் மலேசியா உறுப்பினராக தொடர விரும்புவதாக தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
தற்போது தோக்கியோவில் நடைபெற்று வரும் 2025 ஆசிய பசிபிக் தொலைத்தொடர்பு அமைச்சர்கள் கூட்டம், APT-MM உடன் இணைந்து நடத்தப்படும் இருதரப்பு கூட்டங்கள் மூலம் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் உள்ள பல நாடுகளின் ஆதரவைப் பெற மலேசியா நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
ITU மன்றத்தின் உறுப்பினராக மலேசியா, தொலைத்தொடர்பு மற்றும் இலக்கவியல் உள்கட்டமைப்புத் துறையில் வியூக கொள்கை திசைகளை தீர்மானிப்பதிலும், மாநாட்டு முடிவுகள் செயல்படுத்தப்படுவதை மேற்பார்வையிடுவதிலும், ஆசியப் பகுதி மற்றும் வளரும் நாடுகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று டத்தோ ஃபஹ்மி கூறினார்.
முன்னதாக, தொலைத்தொடர்பு மேம்பாட்டுப் பிரிவு இயக்குநர் டாக்டர் காஸ்மாஸ் லக்கிசன் ஜவாசாவா பிரதிநிதித்துவத்தில் ITU உடன் அவர் இருவழி கலந்துரையாடல்களை நடத்தினார்.
ஜப்பானிய உள்நாடு மற்றும் தொடர்பு விவகார அமைச்சர் முரகாமி செய்ச்சிரோ மற்றும் சீன தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துணை அமைச்சர் யுன்மிங் ஜாங் ஆகியோருடனும் இருவழி கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
''இந்த சந்திப்பு நல்ல பலன்களைத் தந்தது. இணைய வலையமைப்பு பரவலாக மட்டுமல்லாமல், மிகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதில் மலேசியாவின் முயற்சிகளை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்'', என்றார் அவர்.
இதற்கிடையில், ITU ஏற்பாடு செய்த பல உச்சநிலைமாநாடுகளில் கலந்து கொள்ள மலேசியாவை அழைக்க ITU முன்மொழிந்துள்ளதாக ஃபஹ்மி கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)