ஜோகூர் பாரு, 22 மே (பெர்னாமா) -- 2022-ஆம் ஆண்டு கெஅடிலான் தேர்தலின்போது, கட்சி பொதுப் பேரவையில் ஏற்பட்ட பிளவு சூழ்நிலை, இம்முறை நடத்தப்படும் பேரவையில் மீண்டும் நிகழாது என்று தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் நம்புகின்றார்.
தொகுதி மட்ட கட்சித் தேர்தலில், பல பிரபலமான வேட்பாளர்கள் தோல்வியடைந்த போதிலும், எந்தவொரு விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெறாத சூழ்நிலையின் அடிப்படையில் தொடர்பு அமைச்சருமான ஃபஹ்மி அக்கருத்தை வெளியிட்டார்.
''மலாக்காவில் நடைபெற்ற மிக மோசமான பொதுப் பேரவையில் என்ன நடந்தது என்பதை நான் பார்க்கவில்லை. ஒவ்வொரு பேரவைக்குப் பிறகும் அஸ்மின் அலி செய்தியாளர் சந்திப்பை மேற்கொள்வார். அதுதான் பிரிவினைக்கான அடித்தளம். அது மிகவும் மோசமானது. இறைவனுக்கு நன்றி, இம்முறை மிகவும் சிறப்பாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தொகுதி மட்ட தேர்தலில் தேவையற்ற சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை,'' என்றார் அவர்.
இன்று, ஜோகூர் பாருவில், மத்திய நிலையிலான தேர்தல் செயல்முறை குறித்து, ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்த பின்னர், செய்தியாளர்களிடம் ஃபஹ்மி அவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே, மொத்தம் 32,030 உறுப்பினர்கள், நேரடியாகவும் இணையம் வாயிலாகவும் வாக்களிக்கவிருக்கும் தேர்தல் செயல்முறை குறித்து வினவியபோது, அனைத்து ஏற்பாடுகளிலும் தாம் திருப்தி அடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)