பொது

அலோர் ஸ்டார் சிறைச்சாலையில் அமலில் இருக்கும் PKPD மேலும்14 நாட்களுக்கு நீட்டிப்பு

18/10/2020 09:14 PM

கோலாலம்பூர், 18 அக்டோபர் (பெர்னாமா) -- கெடா அலோர் ஸ்டார் சிறைச்சாலையில் அமலில் இருக்கும் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு PKPD, நாளை திங்கட்கிழமை தொடங்கி நவம்பர் முதலாம் தேதி வரையில் 14 நாட்களுக்கு நீட்டிக்கப் பட்டிருக்கிறது.

அப்பகுதியில், சனிக்கிழமை வரையில் ஆயிரத்து 137 கைதிகள் மற்றும் 41 ஊழியர்களை உட்படுத்தி, ஆயிரத்து 178 கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகியதைத் தொடர்ந்து, இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முன்னதாக, அலோர் ஸ்டார் சிறைச்சாலையில் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரையில் பி.கே.பி.டி அமல்படுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

''பி.கே.பி.டி நீட்டிக்கப்படுவதால், கண்காணிப்பு மற்றும் தொடர் சோதனைகளை மேற்கொள்ள முடியும். இதன் மூலம், அலோர் ஸ்டார் சிறைச்சாலையில் குறிப்பாக ஊழியர்களிடையே பரவி வரும் கொவிட்-19 சம்பவங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்,'' என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை, இயங்கலை வழி நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மன்றத்தின் தினசரி செய்தியாளர்கள் சந்திப்பில், அவர் இந்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா