கோலாலம்பூர், 09 ஜூன் (பெர்னாமா) -- அரச மலேசிய கடற்படை, தி.எல்.டி.எம்-க்குச் சொந்தமான இரண்டாம் தொகுதியைச் சேர்ந்த மூன்று கடலோரப் பணிக் கப்பல்கள், 2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து துருக்கியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அக்கப்பல்களின் கட்டுமானப் பணிகள் சீராகவும் திட்டமிட்டபடியும் நடைபெற்று வருவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹாமட் காலிட் நோர்டின் கூறினார்.
''அடுத்தாண்டு இறுதிக்குள் அதை நமது கடற்படையிடம் ஒப்படைப்போம் என்று எதிர்பார்க்கிறோம். அக்டோபரில் முதலாவது, நவம்பரில் இரண்டாவது மற்றும் டிசம்பரில் மூன்றாவது. அனைத்தும் சீராகப் போய்க்கொண்டிருக்கிறது'', என்றார் அவர்.
இன்று, கோலாலம்பூரில், 2026-ஆம் ஆண்டு தற்காப்பு அமைச்சு மற்றும் மலேசிய இராணுவப் படையின் கல்வி சிறப்பு விருது விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முஹாமட் காலிட் அதனைத் தெரிவித்தார்.
'Raja Laut' என்று பெயரிடப்பட்ட இரண்டாம் தொகுதியின் இரண்டாவது கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை துருக்கியில் உள்ள இஸ்தான்புல் கடல் கட்டுமானத் தளத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)