அமெரிக்கா, 03 ஜூன் (பெர்னாமா) -- முன்னணி செயற்கை நுண்ணறிவு அம்சங்களை உருவாக்குபவர்கள் தங்களின் மிகவும் திறன்வாய்ந்த மாதிரிகளைப் பொதுமக்களிடம் வெளியிடுவதற்கு முன்னர், அரசாங்கத்தின் இணையப் பாதுகாப்புச் சோதனைகளுக்காகத் தாங்களாகவே முன்வந்து சமர்ப்பிக்குமாறு அமெரிக்க அதிபர், டோனல்ட் டிரம்ப் நிர்வாகம் கேட்டுக்கொள்ளவிருக்கிறது.
'Mythos' போன்ற சக்திவாய்ந்த புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் குறித்து வாஷிங்டனில் பாதுகாப்பு அச்சங்கள் அதிகரித்து வரும் நிலையில், டிரம்ப் நிர்வாகம், நேற்று, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஒரு நிர்வாக உத்தரவில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு அம்சங்களை உருவாக்குபவர்கள் தங்களின் மாதிரிகளைச் சோதிப்பதற்கான ஒப்பந்தங்களைப் பெறுமாறு நிதி, தற்காப்பு, வர்த்தகம் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைகள், பிற அரசாங்க அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களை, அறிவுறுத்தும் ஒரு நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
அந்த உத்தரவின்படி, அரசாங்கத்திற்கு வெளியே உள்ள நிறுவனங்களுக்கு இந்த மாதிரிகளை வெளியிடுவதற்கு முன்னர், அவற்றைச் சோதிப்பதற்கு அமெரிக்க நிறுவனங்களுக்கு 30 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படும்.
மேலும், அரசாங்கத்தில் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்குமாறும் அந்த நிறுவனங்களுக்கு அந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.
இந்த உத்தரவு, செயற்கை நுண்ணறிவு குறித்த தனது உத்தியை டிரம்ப் மாற்றி வருவதையும், அத்தொழில்நுட்பத்தின் திறன்களைக் கண்காணிப்பதில் மேலும் தீவிரமான பங்கை வகிப்பதையும் உணர்த்துகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)