கென்யா, 02 ஜூன் (பெர்னாமா) -- இராணுவத் தளத்தில் எபோலா நோய்தொற்றுக்கான தனிமைப்படுத்துதல் மையத்தை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய கென்யாவின் Nanyuki நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி, நேற்று போராட்டம் நடத்தினர்.
டயர்களை எரித்தும், சாலையை மறித்து கோஷங்கள் எழுப்பியும் வீதிகளில் பேரணியாக சென்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பந்தப்பட்ட இராணுவ தளம் பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என எழுந்த சட்ட ரீதியான சவாலைத் தொடர்ந்து, இத்திட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்த சில நாட்களுக்குப் பிறகு போராட்டம் தொடங்கியுள்ளது.
திட்டத்திற்கு தடை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட போதிலும், அதன் ஆயத்த பணிகள் இன்னும் தொடரக்கூடும் எனும் தகவல்கள் மக்களிடையே ஆழ்ந்த கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக பதாதைகளை ஏந்தியவாறு, பெரும் குழுக்களாக திரண்டு போராட்டம் செய்தனர்.
அந்த வளாகம் குறித்த தங்களின் கேள்விக்கு பதிலளிக்க தவறிய சில அதிகாரிகளின் செயலையும் அங்குள்ள மக்கள் கண்டித்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)