கோலாலம்பூர், மே 28 (பெர்னாமா) -- இன்று காலை கோலாலம்பூர் Chan Sow Lin இரயில் நிலையத்தின் தண்டவாள இணைப்பு பகுதியில் அம்பாங் ஶ்ரீ பெட்டாலிங் வழித்தடத்திற்கான ரயில் தடம் விலகியதால் அச்சேவையில் தாமதம் ஏற்பட்டது.
பழுதடைந்த தண்டவாள இணைப்பின் மூலம் ஏற்பட்ட இச்சம்பவத்தினால் சம்பந்தப்பட்ட ரயில் நகர இயலாமல் போனதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் RAPID KL குறிப்பிட்டிருந்தது.
சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் புகைப்படங்களின் நம்பகத்தன்மையை பொது போக்குவரத்து நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சம்பவத்தின் போது ரயிலில் 25 பயணிகள் பயணித்ததாகவும், செயல்பாட்டு நடைமுறைகளின்படி அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், Rapid KL தெரிவித்தது.
இதனிடையே, மக்களின் பயணத்தை உறுதிச் செய்வதற்கு, மாற்று ரயில் மற்றும் இலவச பேருந்துகள் என முன்னதாக அறிவிக்கப்பட்ட மாற்று சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)