கோலாலம்பூர், ஏப்ரல் 28 (பெர்னாமா) -- நெகிரி செம்பிலானில் தற்போது நிலவிவரும் அரசியல் நெருக்கடி கூட்டரசு நிலையில் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை இதுவரை பாதிக்கவில்லை.
இவ்விவகாரம் மாநில அளவில் தனிப்பட்டதாக கருதப்பட்டாலும் மத்திய அரசாங்கம் அதன் அண்மைய நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதோடு அந்நிலைமை குறித்து அக்கறைக் கொண்டுள்ளதாகவும் மடானி அரசாங்கத்தின் பேச்சாளர்டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
"இல்லை, தற்போதைக்கு இல்லை. இது நெகிரி செம்பிலானுக்கு மட்டுமே உரிய ஒரு தனித்துவமான விஷயமாக இருக்கலாம். ஆனால், ஒருமைப்பாட்டு அரசாங்க நிலையில் என்ன நடக்கிறது என்பது குறித்து நாம் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும். மேலும், தலைமைத்துவ நிலையில், நெகிரி செம்பிலான் நம்பிக்கைக் கூட்டணி நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. மத்திய நிலையில், தலைமைத்துவம் தான் திசையை நிர்ணயிக்கும் என்று நான் நம்புகிறேன்," என்றார் அவர்.
இன்று, கோலாலம்பூரில், 2026 APAC Google ஆசியா பசிபிக் இணையப் பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஃபஹ்மி அவ்வாறு கூறினார்.
வரும் மே 17-ஆம் தேதி ஜோகூரில் நடைபெறவிருக்கும் நம்பிக்கைக் கூட்டணியின் மாநாட்டில் அடுத்த கட்ட நகர்வு குறித்து அனைத்து மாநிலங்களிலிருந்தும் அடிமட்ட மக்களின் வெளிப்பாடுகளையும் கருத்துகளையும் தலைமைத்துவம் கேட்டறிய வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)