Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்க கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது

24/04/2026 06:40 PM

ஜோகூர் பாரு, 24 ஏப்ரல் (பெர்னாமா) --  உலகளாவிய விநியோக நெருக்கடியின் அழுத்தத்தைத் தொடர்ந்து, எரிசக்தி பயன்பாட்டைக் குறைப்பதற்காக அமைச்சரவை மற்றும் அமைச்சுக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட மேலும் கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

தற்போது பிற நாடுகள் எதிர்கொள்வது போன்ற எரிசக்தி பங்கீட்டுச் சூழ்நிலையில் மலேசியா சிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இதன் தொடர்பான குறித்த இறுதி முடிவு தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றம், MTEN கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.

''நாங்கள் அந்த (விநியோகப் பற்றாக்குறைப் பிரச்சனையை) தவிர்க்க விரும்புகிறோம். எனவே, வீட்டிலிருந்து வேலை செய்வது மற்றும் அவசியமெனக் கருதப்படும் பிற நடவடிக்கைகள் போன்று, எரிசக்தி பயன்பாட்டைக் குறைப்பதற்கான வழிகளை நாங்கள் கண்டறிய வேண்டும். இதுவரை ஜூன் மாத இறுதி வரை எண்ணெய் விநியோகம் போதுமானதாக இருப்பதற்கு கடவ்யுளுக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். ஆனால் டீசல் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது. எனவே, அவ்வப்போது பல நடவடிக்கைகள் அறிவிக்கப்படும்'', என்றார் அவர்.

எரிசக்தி விநியோக நிலையை முழுமையாகக் கண்காணிப்பதற்காக MTEN தற்போது இரண்டு நாள்களுக்கு ஒருமுறை அமைச்சுக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சந்திப்பு நடத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையிலிருந்து வெளியேறியப் பிறகு எரிபொருளை ஏற்றி வரும் இரு மலேசியக் கப்பல்கள் முற்றுகையைக் கடந்து செல்ல அனுமதிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.

''ஒரு கப்பல் (ஜோகூர், பெஙெராங்கிற்கு) வந்துவிட்டது. மற்றொன்று கிட்டத்தட்ட வந்து சேர்ந்து, மலேசியக் கடல் எல்லைக்குள் நுழைகிறது. இருப்பினும், (ஹோர்முஸ் நீரிணையிலிருந்து) ஏற்கனவே புறப்பட்டுச் சென்ற இரு கப்பல்களும் இன்னும் சில கட்டுப்பாடுகளை எதிர்கொண்டுள்ளன. எனவே, முன்னதாகவே அனுமதி வழங்கப்பட்டுவிட்டதால் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்'', என்று அவர் கூறினார்.

முன்னதாக ஈரானிய அரசாங்கத்தால், குறிப்பாக அந்நாட்டின் அதிபரால் அந்த நீர்வழிப்பாதையைக் கடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதிலும் கப்பல் எதிர்கொண்ட கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)