கோலாலம்பூர், ஏப்ரல் 19 (பெர்னாமா) -- தினசரி பொதுமக்களிடம் பெறப்படும் புகார்களைத் தொடர்ந்து சாலைகளில் அராஜகம் புரியும் கும்பல்களின் நடவடிக்கையைக் கட்டுப்படுவதற்காக கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையான ஜே.எஸ்.பி.டி ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தொடங்கிய இந்த நடவடிக்கையில்,
கோலாலம்பூரின் பல்வேறு முக்கிய இடங்களில், சுமார் 1,200 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதாக கோலாலம்பூர் ஜே.எஸ்.பி.டி தலைவர் ஏசிபி முஹமட் சம்சுரி முஹமட் இசா தெரிவித்தார்.
வாகனத்தின் பிரேக் முறையை மாற்றி அமைத்து அது இல்லாமல் செய்வது போன்ற தீவிர மாற்றங்கள் மற்றும் செல்லாத பதிவு எண்களின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக 30 மோட்டார் சைக்கிள்கள் இச்சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர்ஃ கூறினார்.
"இப்பகுதியில் நாங்கள் பலமுறை சோதனை நடத்தி இருந்த போதிலும், இங்கு சட்டவிரோத மோட்டார் பந்தயங்கள் இன்னும் நடைபெறுகின்றன. எனவே, நாங்கள் அதைச் செய்வோம், ஒவ்வோர் இரவும் சோதனைகளை மேற்கொள்வோம். இன்றிரவு நாங்கள் பார்த்ததில், இதுவரை 30 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக பிரேக் முறையை மாற்றி அமைத்து அது இல்லாமல் செய்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன,'' என்றார் அவர்.
இச்சோதனையில் 350 சம்மன் வெளியிடப்பட்டது.
மேலும், அச்சோதனை நடவடிக்கையின் போது methamphetamine போதைப் பொருளை உட்கொண்ட இருவர் மற்றும் மதுபோதையில் வாகனத்தை செலுத்திய இருவர் என மொத்தம் நால்வர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதிகளும், அதிக மக்கள் கொண்ட குடியிருப்புகளும், மோட்டார் சைக்கிள் புகைப்போக்கியில் செய்யப்படும் மாற்றங்களால் ஏற்படும் இரைச்சல் தொடர்பான இடையூறுகளுக்கான முக்கிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக முஹமட் சம்சுரி கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)