Ad Banner
 பொது

முதல் 'செயற்கை நுண்ணறிவு வகுப்பறை' - ஜாலான் பாரிட் இப்ராஹிம் தமிழ்ப்பள்ளி சாதனை

10/04/2026 06:42 PM

பொந்தியான் , ஏப்ரல் 10 (பெர்னாமா) -- மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்பதற்கு ஏற்ப குறைந்த மாணவர்களைக் கொண்டிருந்தாலும் உலக அளவில் அங்கீகரிக்கப்படும் Microsoft Showcase School பட்டத்தைப் பெற்றுள்ள முதல் தமிழ்ப்பள்ளியாக ஜோகூர் பொந்தியானில் உள்ள ஜாலான் பாரிட் இப்ராஹிம் தமிழ்ப்பள்ளி விளங்கியுள்ளது.

AI Powered Classroom எனப்படும் இப்பள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள ‘செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வகுப்பறை, கல்வியமைச்சு உள்ளிட்ட பலரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

மொத்தம் 33 மாணவர்கள் மற்றும் 8 ஆசிரியர்களை மட்டுமே கொண்ட இப்பள்ளி, 'ஒரு மாணவருக்கு ஒரு சாதனம்' என்ற இலக்கை முழுமையாக நிறைவேற்றியுள்ளதாக என்று பள்ளியின் தலைமையாசிரியர் கலையரசி அரிகரன் கூறினார்.

நவீன தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பமான I-C-T-ஐ, தமிழ்ப்பள்ளிகளும்  நன்கு பயன்படுத்தி முற்போக்கான சிந்தனையை நோக்கி வளரும் முயற்சியாக இந்த வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளதாக அதன் ஆசிரியர் கார்த்திக் பெருமாள் தெரிவித்தார். 

2024-ஆம் ஆண்டு தொடங்கிய மின்னியல் கற்றல் முயற்சி, தற்போது கல்வி அமைச்சு வழங்கிய மடிக்கணினிகள், விவேக மின்னியல் பலகை மற்றும் மாணவர்களுக்கான மடிக்கணினிகள் ஆகியவற்றின் ஆதரவுடன் மேலும் விரிவடைந்து, கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறையில் புதிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

இதனிடையே, இன்று அப்பள்ளிக்கு வருகை புரிந்த கல்வியமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் அமினுடின் ஹசிம், ‘செயற்கை நுண்ணறிவு வகுப்பறையை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்ததோடு, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கற்றல் முறையை ஊக்குவிக்கும் வகையில் கல்வி அமைச்சின் சார்பில் 10,000 ரிங்கிட் நிதியுதவியையும் வழங்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)