சிரம்பான், 17 மார்ச் (பெர்னாமா) -- பொது அமைதியைச் சீர்குலைக்கும் அளவிற்கு, கடந்த மாதம் முகநூலில் காணொளி ஒன்றை பதிவேற்றிய குற்றச்சாட்டை E-HAILING ஓட்டுநரான பி.மகேந்தரா பூபதி, இன்று சிரம்பான் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
மஜிஸ்திரேட் நூருல் ஷக்கினா ரொஸ்லி முன்னிலையில் தமக்கு எதிராக வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 53 வயதான மகேந்தரா பூபதி அனைத்து இஸ்லாமியர்களிடமும் மன்னிப்புக் கோரினார்.
பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்துகள் கொண்ட காணொளியை முகநூலில் பதிவேற்றியதன் மூலம் அந்நபர் பொது அமைதியைச் சீர்குலைத்ததாக அவ்வாடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி கம்போங் டத்தோ மன்சோர், மஸ்ஜிட் ஜாமிக் டத்தோ பண்டார் ஹஜி அஹ்மாட் ராசாவில் அவர் அக்குற்றத்தைப் புரிந்துள்ளார்.
அதிகபட்சம் ஈராண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது அவ்விரண்டுமே விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 505(b)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது.
இந்நிலையில், 4,000 ரிங்கிட் அபராதத்தை விதித்த மாஜிஸ்திரேட், அத்தொகை செலுத்த தவறினால் ஏழு மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)