Ad Banner
Ad Banner
Ad Banner
 

ஜோகூரின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் கவனம் செலுத்தப்படும் - டத்தோ ஓன் ஹஃபிஸ்

12/03/2026 06:37 PM

ஜோகூர் பாரு, 12 மார்ச் (பெர்னாமா) -- ஜோகூர் பொருளாதார மாற்றத் திட்டம், ஜே.ஈ.தி.பி.யை செயல்படுத்துவதன் மூலம், ஜோகூரில் பொருளாதார வளர்ச்சியின் தாக்கம் அதன் 10 மாவட்டங்களிலும் தொடர்ந்து உணரப்படும் என்று ஜோகூர் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி தெரிவித்திருக்கிறார்.

ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம், அம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய உந்து சக்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், வளர்ச்சி குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் இருப்பதை மாநில அரசு உறுதி செய்வதாக அவர் குறிப்பிட்டார்.

ஜோகூர் மக்கள் பொருளாதார வளர்ச்சியின் பலன்களைச் சமமாக அனுபவிக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு மாவட்டமும் அந்தந்த பலம் மற்றும் ஆற்றலின் அடிப்படையில் மேம்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

“ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஒரு தொடக்கம் மட்டுமே. இதர 10 மாவட்டங்களை மேம்படுத்தவும் திட்டங்கள் உண்டு.

“உதாரணமாக, மகாராணி எரிசக்தி நுழைவாயில் திட்டத்தின் மூலம் மூவார் மாவட்டம் அபிவிருத்தி செய்யப்படும். தங்காக் சுற்றுலாத் துறையில் கவனம் செலுத்தும். மெர்சிங் மீன்வளம் மற்றும் சுற்றுலாவில் கவனம் செலுத்தும், அதே நேரத்தில் செகாமட் நவீன விவசாயத்தில் கவனம் செலுத்தும்," என்று அவர் கூறினார்.

அண்மையில், ஜோகூர் மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ இல்லமான சௌஜானாவில், பெர்னாமா தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜூ துரை ராஜ்-சின் தலைமையில் நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணலின்போது, ஓன் ஹஃபிஸ் அந்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

ஒவ்வொரு மாவட்டங்களின் உள்ள மக்களின் வருமானத்தை அதிகரிக்கவும், அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் கூடிய வளர்ச்சி திட்டங்களைப் பெறுவதை உறுதி செய்வதில் மாநில அரசு உறுதியாக இருப்பதாக ஒன் ஹபீஸ் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஜே.ஈ.தி.பி.,  2030 ஆம் ஆண்டுக்குள் ஜோகூரை வளர்ச்சி அடைந்த மாநிலமாக உயர்த்துவதற்கான மாநில அரசின் வியூக கட்டமைப்பாகும்.

இது ஜோகூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்கி 26000 கோடி ரிங்கிட்டை இலக்காகக் கொண்டுள்ளது.

10 மாவட்டங்கள் மற்றும் 16 ஊராட்சிகளை உள்ளடக்கிய முழுமையான மேம்பாட்டுத் திட்டம், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 69,000 ரிங்கிட்டை விட அதிகமாக அதிகரிப்பதையும், இளம் தொழிலாளர்களுக்கு 200,000 உயர் திறமையான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதையும் இலக்காகக் கொண்டுள்ளது.

ஜோகூர் பாரு மற்றும் கூலாய் ஆகிய இடங்களில் உள்ள பொருளாதாரத் துறைகள், இரு மாவட்டங்களையும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ), உயர் தொழில்நுட்ப உற்பத்தி, இலக்கவியல் பொருளாதாரம், விண்வெளி மற்றும் ஏற்றுமதி சார்ந்த சேவையின் வளர்ச்சிக்கான மையங்களாக மாற்றும் என்று அவர் குறிப்பிட்டார்.

மூவார், சுற்றுலா மற்றும் அதிக மதிப்புள்ள உணவு பதப்படுத்தும் தொழில் மையமாகவும், தொழில்துறை எரிசக்தி வளாகமாகவும் உருவாக்கப்படும்.

அதே நேரத்தில் தங்காக் ஒரு வியூக போக்குவரத்து மற்றும் விவசாய சுற்றுலா மையமாகவும் உருவாக்கப்படும்.

செகாமட் அதிக மதிப்புள்ள பயிர் மற்றும் உயிரி பதப்படுத்தும் மண்டலமாக உருவாக்கப்படும்.

இதனிடையே, பத்து பஹாட் பதப்படுத்துதல் மற்றும் உற்பத்தி தொழில் மையமாகவும், பொந்தியான் பசுமை எரிசக்தி மற்றும் மீன் வளர்ப்பு தயாரிப்பு மையமாகவும் வலுப்படுத்துகிறது,.

கோத்தா திங்கி ஒரு எரிசக்தி நுழைவாயிலாகவும், பசுமை வேதியியல், விவசாயம் மற்றும் சுற்றுலா மையமாகவும் வலுப்படுத்தப்படுகிறது.

மெர்சிங் நீலப் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக உருவாக்கப்படும் வேளையில் குளுவாங் உயர் மதிப்புள்ள விவசாய பொருள்களைப் பதப்படுத்துதல் மற்றும் விவசாயம் மற்றும் தளவாட மையமாக உருவாக்கப்படும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)