கோலாலம்பூர், மார்ச் 01 (பெர்னாமா) -- அல்-குரானை மிதித்த சம்பவம் தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது.
நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி அமலாக்கத் தரப்பினர் முழுமையான விசாரணையை மேற்கொண்டு வருவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் ஒரு நாட்டில், சட்ட செயல்முறையின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மாறாக, சமூக ஊடகங்கள் மூலம் உணர்வு ரீதியான அழுத்தம் அல்லது கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு அல்ல என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இந்த நாடு சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறதே தவிர, உணர்வுகளாலும் ஆருடங்களலாலும் அல்ல என்று டத்தோ ஶ்ரீ அன்வார் விவரித்தார்.
எனவே அனைத்து தரப்பினரும் இவ்விவகாரத்தை, முற்றிலும் அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறும், பொது அமைதியைப் பாதிக்கக்கூடிய ஆருடங்கள் அல்லது அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அல்-குரானை மிதித்து இஸ்லாத்தை அவமதித்த வழக்கின் விசாரணைக்கு உதவுவதற்காக அல்-சுல்தான் அப்துல்லா பஹாங் மலேசியப் பல்கலைக்கழகம், UMPSA-வின் மாணவர் ஒருவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)