கோலாலம்பூர், பிப்ரவரி 28 (பெர்னாமா) -- இவ்வாண்டு நாடு முழுவதும், 3,000 முதல் 5,000 பெறுநர்களை இலக்காகக் கொண்டு ஏசான் குழும நிறுவனங்களும் மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸ், கிம்மாவும் இணைந்து ஆறாவது ஆண்டாக Jelajah Ihya Ramadan திட்டத்தை தொடர்கின்றன.
மக்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல் தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக, ஒவ்வொரு ரமலான் மாதத்தில் இந்த திட்டத்தை தங்கள் நிறுவனத்தின் ஆண்டு நிகழ்வாக மேற்கொண்டு வருவதாக ஏசான் குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அப்துல் ஹமிட் பி.வி. அப்டு தெரிவித்தார்.
“ஏழை எளியோரை நேரடியாக சென்று, அவர்களுக்கு எங்களுடைய அன்பளிப்பை, அவர்களுடைய இடத்திலே தேடி, அவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கொடுப்பதில் நாங்கள் மட்டில்லா மகிழ்ச்சி அடைகின்றோம். இதுவரையில், எங்களின் கணக்குபடி, ஏறக்குறைய 5,000 பேருக்கு கொடுக்கக்கூடிய ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றோம். இதுவரையில், 3,800 பேருக்கு கொடுப்பதற்கான லிஸ்ட் வந்துவிட்டது. ஆனால், 1,800 பேருக்கு மேல் தற்போது கொடுத்து விட்டோம். அடுத்த வாரம் இன்னும் 2,000 பேருக்கு மேல் கொடுக்க வேண்டியிருக்கின்றது,'' என்றார் அவர்.
இன்று, செராஸில் Jelajah Ihya Ramadan நிகழ்ச்சி மற்றும் 2026-ஆம் ஆண்டு நோன்புப் பெருநாளை முன்னிட்டு சாகாட் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அப்துல் ஹமிட் அவ்விவரங்களைக் கூறினார்.
இதனிடையே, நாட்டிலுள்ள ஏழை மக்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதில், தமது தரப்பு ஏசான் குழும நிறுவனத்துடன் இணைந்து சேவையாற்றி வருவதாக கிம்மா தலைவர், டத்தோ ஶ்ரீ சைட் இப்ராஹிம் காடிர் தெரிவித்தார்.
“எங்களிடம் தரவுத் தளம் உள்ளது. ஏழை மக்கள், பி40, இவர்களை எல்லாம் அடையாளம் கண்டு, எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கண்டறிந்து, இந்த தரவுகளைக் கொண்டு, தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து, இந்த பெருநாள் காலங்களில் உதவிகளைக் கொடுத்து வருகின்றோம்,'' என்றார் அவர்.
இரு தரப்பினரின் சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக, Jelajah Ihya Ramadan திட்டம் விரைவில் பல மாநிலங்களுக்கும் தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)