ஹண்டர்வில், 16 பிப்ரவரி (பெர்னாமா) -- கனமழை, திடீர் வெள்ளம் மற்றும் பலத்த காற்றின் காரணமாக நியூசிலாந்தின் வட தீவு முழுவதும் பல்லாயிரக் கணக்கானோரின் குடியிருப்புப் பகுதிகளுக்கான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
வெலிங்டனில் சுமார் 10,000 பேர் உட்பட, 30,000-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாலைகளை பயன்படுத்த வேண்டாம் என்று வாகனமோட்டிகளுக்கு வலியுறுத்தப்பட்ட வேளையில், இந்த இயற்கை பேரிடரால் பல பள்ளிகளும் மூடப்பட்டன.
செவ்வாய்க்கிழமை தென் தீவின் கிழக்கு கடற்கரையை நோக்கி வீசும் புயலினால் கனமழை பெய்யும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் கூறியது.
இதனால், பெரும் சேதம் ஏற்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே, விமானப் பயணங்களில் தாமதம் ஏற்பட்டிருக்கும் நிலையில் சில பயணங்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வார இறுதியிலிருந்து வட தீவின் கிழக்கே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை பல பகுதிகளைத் தாக்கியதைத் தொடர்ந்து, கனமழை மற்றும் கடுமையான புயல் தொடர்ந்து வீசுகிறது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]