செராஸ், 06 பிப்ரவரி (பெர்னாமா) -- மலேசிய-சீனா இளைஞர்களிடையே திவெட் எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் தொடர் முயற்சியாக, BELIA MAHIR ஏற்பாட்டில் இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ராவின் ஆதரவோடு மீண்டும் தொடர்கின்றது MCYTT 2.0 எனப்படும் 2.0 மலேசியா-சீனா இளைஞர் திவெட் பயிற்சித் திட்டம்.
அரசாங்கம் வழங்கிய 29 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 500 மாணவர்களை உட்படுத்தி, கடந்தாண்டு MCYTT 1.0 திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, இவ்வாண்டும் அதே நிதி ஒதுக்கீட்டில் மேலும் 500 மாணவர்களைக் கொண்டு MCYTT 2.0 திட்டம் தொடர்வதாக, மித்ராவின் தலைமை இயக்குநர் பிரபாகரன் கணபதி கூறினார்.
இந்திய இளைஞர்கள், குறிப்பாக பி40 மற்றும் எம்40 பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் அனைத்துலக தொழில்துறை பயிற்சியில் பங்கேற்கவும், உலகளாவிய திறன் அங்கீகாரத்தைப் பெறவும் இத்திட்டம் வாய்ப்பளிப்பதாக, பிரபாகரன் கணபதி தெரிவித்தார்.
''கடந்தாண்டு இத்திட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பி40 மற்றும் எம்40 பிரிவைச் சேர்ந்தவர்கள். முதல்முறையாக வெளிநாடு பயணம் மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு நல்ல ஓர் அனுபவம். திவெட் பயிற்சியைத் தவிர்த்து நல்ல ஒரு அனுபவம் அவர்களுக்குக் கிடைத்தது. மேலும், பங்கேற்ற 500 மாணவர்களில் சுமார் 50 மாணவர்களுக்கு BELIA MAHIR வேலை வாய்ப்பையும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கின்றது''
இப்பயிற்சி திட்டத்திற்கான சான்றிதழ் சீனா அரசாங்கத்திடமிருந்து வழங்கப்படுவதால், அது இளைஞர்களின் கல்வி தகுதியை உயர்த்தி, வேலை வாய்ப்பைப் பெறுவதைக் எளிதாக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் தகுதிகள் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார்.
''18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் எஸ்.கே.எம் சான்றிதழ் படிவம் 2 முதல் இளங்கலைப் பட்டப்படிப்பு மாணவர்களாக இருக்க வேண்டும். இறுதி ஆண்டில் படிக்கும் மாணவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால், அந்த நேரத்தில் அவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கும் போது அவர்கள் அனுபவம் உட்பட வழங்கப்படும் சான்றிதழ் அவர்கள் வேலை வாய்ப்பைத் தேடுவதற்குச் சுலபமாக இருக்கும்''
இதனிடையே, 12 வகையான திறன் கல்வியை உட்படுத்தி இரண்டு வாரங்கள் மாணவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும் நிலையில், அது அவர்களுக்கு ஏற்படுத்தும் நீண்டகால நன்மைகள் குறித்து, BELIA MAHIR தலைவர் முஹமட் ரிசான் ஹசான் விளக்குகின்றார்.
''அரசாங்கத்தின் உயர் வளர்ச்சி, உயர் மதிப்பு போன்ற விருப்பங்களை நாம் பார்த்தால். சீனாவில் ஏற்பாடு செய்திருக்கும் பயிற்சிகள் உண்மையில் 2030-ஆம் ஆண்டு புதிய தொழில்துறையுடன் ஒத்துப்போகின்றது. 2030-ஆம் ஆண்டு தேசிய திவெட் கொள்கை. தற்போது இருப்பதை விட மாத ஊதியத்தை அதிகரிப்பதே அதன் நோக்கமாகும்''
இத்திட்டத்தில் ஆர்வமுள்ள மாணவர்கள், இம்மாதம் 28-ஆம் தேதிக்குள் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதோடு, கூடுதல் தகவல்களைத் தெரிந்துக் கொள்ள திரையில் காணும் மித்ராவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை நாடலாம்.
இன்று, கோலாலம்பூர், செராஸில் உள்ள International Youth Centre, IYC-இல் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)