ஜோகூர் பாரு, பிப்ரவரி 4 (பெர்னாமா) -- ஸ்கூடாய், கங்கார் புலாய்-இல், கடந்த செப்டம்பர் மாதம் ஆடவர் ஒருவரை கொலை செய்ததாக இரண்டு சகோதரர்கள் இன்று ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
மாஜிஸ்திரேட் நபிலா நிஸாம் முன்னிலையில் தங்கள் மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 32 வயதான ஆர். அரசனும், 36 வயதான ஆர். யுதேசும் அதை புரிந்ததாகத் தலையசைத்தனர்.
எனினும், கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால் அவர்களிடம் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி நள்ளிரவு மணி 12.30 தொடங்கி அதிகாலை 4 மணி வரை, கங்கார் புலாய்-இல் உள்ள செம்பனைத் தோட்டத்தில், 28 வயதான V. தமிழ்செல்வனை, அவ்விரு ஆடவர்களும் இணைந்து கொலைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 302 மற்றும் அதே சட்டம் செக்ஷன் 34-இன் கீழ் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரணத் தண்டனை அல்லது மரணத் தண்டனை விதிக்கப்படாவிட்டால் அதிகபட்சம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 12 முறை வரை பிரம்படியும் விதிக்கப்படலாம்.
இவ்வழக்கு தொடர்புடைய அறிக்கைகளுக்கு காத்திருப்பதால், மறுசெவிமடுப்பு ஏப்ரல் 6-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
கடந்த மாதம், கங்கார் புலாய்-இல் உள்ள செம்பனை தோட்டத்தில் உள்ள வீடொன்றில் உயிரிழந்து மூன்று மாதங்களுக்கு மேலானதாக நம்பப்படும் ஐந்து குடும்ப உறுப்பினர்கள் உட்பட ஆறு மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக நேற்று ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹமான் அர்சாட் தெரிவித்திருந்தார்.
உயிரிழந்த அறுவரில், 35 வயதுடைய பெண் ஒருவர், 19 வயதுடைய சிறுமி ஒருவர், ஒன்பது மற்றும் ஐந்து வயதுடைய இரண்டு சிறுமிகள், இரண்டு வயது சிறுவன் ஒருவன் மற்றும் 28 வயது ஆண் ஒருவர் அடங்குவர் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பிலான மேல் விசாரணை மற்றும் உளவுத்துறை தகவல்களைத் தொடர்ந்து, ஜனவரி 21-ஆம் தேதி இஸ்கண்டார் புத்தெரி-யில் மூன்று உள்ளூர் ஆடவர்களையும் 19 முதல் 35 வயதுக்கு உட்பட்ட ஒரு பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களில், இரண்டு ஆடவர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட வேளையில், மற்ற இரண்டு சந்தேக நபர்களும் இவ்வழக்கு விசாரணையின் சாட்சிகளாகப் பயன்படுத்த போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)