புத்ராஜெயா, 26 ஜனவரி (பெர்னாமா) -- அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு வலுப்பெற்றதற்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது நன்றியை வெளிப்படுத்தினார்.
கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத மிகச் சிறந்த ஒரு அடைவுநிலையை உள்நாட்டு நாணயம் பதிவு செய்துள்ளதை, வலுவடைந்திருக்கும் ரிங்கிட் குறிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று காலை மணி 8-க்கு அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9850/9950 என்ற நிலையில் திறக்கப்பட்டது.
இது, கடந்த வெள்ளிக்கிழமை இறுதி வர்த்தக முடிவில் இருந்த 4.0045/0080 நிலையிலிருந்து வலுப்பெற்றதாகும்.
கடந்த 2018-ஆம் ஆண்டு மே 24-ஆம் தேதி, இதே நிலையை எட்டிய ரிங்கிட், அமெரிக்க டாலருக்கு எதிராக 3.9797 என்ற அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது.
பேங்க் நெகாரா மலேசியா, ஓ.பி.ஆர் எனப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றமின்றித் தக்கவைத்துக் கொண்டதும், அமெரிக்க டாலர் குறியீடு பலவீனமடைந்ததும் முதலீட்டாளர்கள் இடையே அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியதாலும் ரிங்கிட் வலுப்பெற்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)