கோலாலம்பூர், 2 டிசம்பர் (பெர்னாமா) -- சபா அரசாங்கத்தில் மாநில சட்டமன்ற உறுப்பினர் பதவி உட்பட நியமிக்கப்படும் எந்தப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என்று அம்மாநில ஜனநாயக செயல்கட்சி, ஜ.செ.க முடிவு செய்துள்ளது.
சபா மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிப்பதற்காக, அக்கட்சியின் மத்திய செயற்குழு ஏற்பாடு செய்திருந்த அவசரக் கூட்டத்தில் அம்மாநில ஜ.செ.க இம்முடிவை எடுத்ததாக, அதன் பொதுச் செயலாளர் ஆண்டனி லோக் தெரிவித்தார்.
மாநில அரசாங்கக் கட்டமைப்பில் இல்லாவிட்டாலும், சபா மக்களுக்கான சேவையைத் தொடர்ந்து செய்யவிருப்பதோடு அவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியை தமது தரப்பு முன்னெடுக்கும் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஆண்டனி லோக் கூறினார்.
ஜ.செ.க மற்றும் நம்பிக்கை கூட்டணி மீதான மக்களின் நம்பிக்கைக் குறைந்திருப்பதை இத்தேர்தல் முடிவுகள் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே, பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் அடுத்த ஆறு மாதங்களுக்கு சீர்திருத்த திட்டத்தை உருவாக்கும் வகையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இணைந்து ஜ.செ.க செயல்படும் என்றும் லோக் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)