ரவூப், 14 செப்டம்பர் (பெர்னாமா) -- ரவூப், சுங்கை ருவான், உலு காலி, ஐ.ஜெ.எம் குவாரியில், நேற்று மதியம் மணி 12.50 அளவில் திடீரென பாறைகள் இடிந்து விழுந்ததில், அதன் தொழிலாளி ஒருவர் புதையுண்டார்.
கல் உடைப்பு இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்த, கிளந்தான், தானா மெராவை சேர்ந்த 30 வயதுடைய முஹமட் ஃபஸ்ருல் இல்லாஹி அப்துல் ரஹ்மான் என்பவரே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவராவார்.
கல் உடைப்பு இயந்திரம் புதைவதற்கு முன்பதகாவே, பாதிக்கப்பட்ட அந்நபர் அதிலிருந்து வெளியே குதித்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக, ரவூப் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டர் முஹமட் ஷாரில் அப்துல் ரஹ்மான் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் சிராய்ப்பு காயங்களுக்கு ஆளான மேலும் மூன்று தொழிலாளர்கள் ரவூப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நில அசைவு தொடர்வதால், அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம், மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, JBPM உட்பட இதர நிறுவனங்களின் தேடல் மற்றும் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரை அடையாளம் காணும் பொருட்டு, K9 பிரிவு நாய்களின் உதவியை JBPM நாடியுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)