கோலாலம்பூர், 08 செப்டம்பர் (பெர்னாமா) - பூர்வக்குடி சமூகத்தின் கல்வியை மேம்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அரசாங்கத்தின் கடப்பாட்டிற்கு இணங்க அவர்களிடையே தொழில் நிபுணர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதன் வழி, அச்சமூகம் தொடர்ந்து முன்னேறவும் வளரவும் வழிவகுத்துள்ளது.
பூர்வக்குடி மக்களிடையே 20-க்கும் மேற்பட்ட முனைவர் பட்டம் பெற்றவர்கள், ஐந்துக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், பொறியியலாளர்கள், கணக்காய்வாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களும் உள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
"கல்வியைப் பொறுத்தமட்டில் அவர்கள் ஓரங்கட்டப்படவில்லை. மாறாக, பூர்வக்குடி இனத்தவர்கள் கல்வி கற்பதற்கும் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். மேலும் அவர்கள் முழு அர்ப்பணிப்புடன் கல்வித் துறையில் ஈடுபட வேண்டும் என்றும் விரும்புகிறோம். உதாரணமாக, தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து சேவை வழங்கப்படுகிறது. மேலும் அவர்களை ஊக்குவிக்க நாளொன்றுக்கு நான்கு ரிங்கிட் வீதம் உதவித் தொகையுடன் இன்னும் பிற உதவிகளும் வழங்கப்படுகின்றன," என்றார் அவர்.
இன்று மேலவையில் நடைபெற்ற கேள்வி பதில் அங்கத்தின் போது கல்வி, தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சியின் மூலம்
அவர்களின் பங்கேற்பை வலுப்படுத்த மூன்று முக்கிய அணுகுமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர் அஹம்ட் சாஹிட் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)