சிட்னி, 2 ஜூலை (பெர்னாமா) -- லட்சக் கணக்கான வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களைக் கொண்ட தரவுத்தளத்தை, இணையத் தாக்குதல் நடத்திய ஒருவர் ஊடுருவியதாக Qantas விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இது ஆஸ்திரேலியாவின் பல ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய மோசடி சம்பவம் என்றும், நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்ட நெருக்கடிக்குப் பிறகு, நம்பிக்கையை மீண்டும் உருவாக்கிய தனது நிறுவனத்திற்கு இது ஒரு பின்னடைவாகும் என்றும் குவாண்டஸ் தெரிவித்துள்ளது.
அந்த இணையத் தாக்குதல்காரர், 60 லட்சம் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள், பிறந்த தேதிகள் மற்றும் வழக்கமாக பயணிப்பவர்களின் எண்களைக் கொண்ட ஒரு அழைப்பு மையத்தையும் மூன்றாம் தரப்பு வாடிக்கையாளர் சேவை தளத்தையும் குறிவைத்து இந்நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அழைப்பு மையம் இருக்கும் இடம் அல்லது எந்த வாடிக்கையாளரின் தகவல்கள் வெளியிடப்பட்டன போன்ற விவரங்களை குவாண்டஸ் விமான நிறுவனம் வெளியிடவில்லை.
வழக்கத்திற்கு மாறான செயல்பாட்டைக் கண்டறிந்தப் பிறகு, அதைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில், தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ள குவாண்டஸ் குழுமம், வாடிக்கையாளர்களைத் தொடர்புக் கொண்டு, அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்கும் என்று தெரிவித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)