புத்ராஜெயா, 25 ஜூன் (பெர்னாமா) -- நம்பிக்கை மோசடி, சொத்துக்குவிப்பு மற்றும் கள்ளப்பண பறிமாற்றம் தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து, முவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மானை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
2023-ஆம் ஆண்டு நவம்பர் ஒன்பதாம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், தம்மீது விதித்த ஏழாண்டுகள் சிறை, இரு பிரம்படிகள் மற்றும் ஒரு கோடி ரிங்கிட் அபராதம் ஆகிய தண்டனைகளிலிருந்து விடுவிக்குமாறு, சைட் சாடிக் செய்த மேல்முறையீட்டிற்கு அனுமதியளித்து மூவர் அடங்கிய நீதிபதி குழு இத்தீர்ப்பை வழங்கியது.
சைட் சாடிக்கு எதிரான போதிய முகாந்திரங்களை அரசு தரப்பு நிரூபிக்கத் தவறியிருப்பதால் டத்தோ அஹ்மாட் சைடி இப்ராஹிம், டத்தோ அஸ்மான் அப்துல்லா மற்றும் டத்தோ நோரின் படாருடின் ஆகிய மூவர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிபதி குழு அந்த ஒருமித்த தீர்ப்பை அளித்தது.
சுயநலத்திற்காக சொத்துகளை தவறாக பயன்படுத்தியதாக செக்ஷன் 403-இன் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஆதரிக்கும் வகையிலான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க தவறியதற்காகவும் அவர்கள் இத்தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
2001-ஆம் ஆண்டு கள்ளப் பண பரிமாற்றம், பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பணம் பெறும் சட்டத்தின் கீழ் உள்ள குற்றச்சாட்டுகளை நிலைநாட்ட முடியாததை மேல்முறையீட்டு நீதிமன்றம் கண்டறிந்தது.
நம்பிக்கை மோசடிக்கு உடந்தையாக இருந்தது, சொத்துகளை தவறாகப் பயன்படுத்தியது மற்றும் பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு, ARMADA நிதி சம்பந்தப்பட்ட பணமோசடி ஆகிய நான்கு குற்றச்செயல்களை புரிந்ததாக கடந்த 2023-ஆம் ஆண்டு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை, இரண்டு பிரம்படி மற்றும் ஒரு கோடி ரிங்கிட் அபராதம் விதித்திருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)