Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

கனரக வாகன ஓட்டுநருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை

18/06/2025 05:32 PM

தைப்பிங், 18 ஜூன் (பெர்னாமா) --   ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்காக கனரக வாகன ஓட்டுநர் ஒருவருக்கு தைப்பிங் உயர் நீதிமன்றம், இன்று எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 80 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், சுங்கை சிப்புட்டில் அவர்கள் அனைவருக்கும் மரணம் விளைவிக்கும் வகையில் ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியது நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

Y. வெற்றி வேலுவின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த நிதிபதி நோர் ருவெனா முஹமட் நுர்டின், அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், திருத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 20,000 ரிங்கிட் அபராதமும் விதித்தார்.

மேலும், கடந்த ஜூன் 13-ஆம் தேதி தொடங்கி தண்டனைகள் ஏக காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட அவர், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

மேலும் அந்நபர், தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு உரிமம் பெறுவதற்குத் தகுதியிழப்பதோடு, தண்டனை விவரங்கள் ஓட்டுநர் உரிமத்திலும் பதிவு செய்யப்படும்.

2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி, இரவு மணி 10,20 அளவில், சுங்கை சிப்பூட், ஈப்போ-கோலா கங்சார் சாலையின் 37-வது கிலோமீட்டரில் முஹமட் ஃபைஸ் பக்ஹாரி, அவரது மனைவி, நிக் லெடாயு நிக் ஹசான், அவர்களின் குழந்தை முஹமட் ஃபாக்கி இர்ஷாட் மற்றும் மனைவியின் தங்கை நிக் இஃபேக்கா நிக் ஹசானுக்கு மரணத்தை விளைவித்ததாக வெற்றி வேல் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)