கோலாலம்பூர், 03 ஜூன் (பெர்னாமா) -- இவ்வாண்டு இறுதிக்குள், C-CISO எனப்படும் சான்றளிக்கப்பட்ட தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரியாக, இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் சுமார் 100 பேருக்கு சான்றிதழ் வழங்க இலக்கவியல் அமைச்சு இலக்குக் கொண்டுள்ளதாக கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
C-CISO சான்றிதழ் திட்டத்தின் மூலம், இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக பொது சேவை துறையின் தயார்நிலையை வலுப்படுத்தும் முயற்சியாக, அதிக நிபுணர்களை உருவாக்குவதற்கு தமது அமைச்சு உறுதிபூண்டுள்ளதாக, அவர் கூறினார்.
EC-மன்றம் மற்றும் HRD Corp எனப்படும் மனிதவள மேம்பாட்டு கழகத்தின் வியூக ஒத்துழைப்பு மூலம் இம்முயற்சி மேற்கொள்ளப்படும் நிலையில், இன்று ஏழு பங்கேற்பாளர்கள் சான்றிதழைப் பெற்றதாக கோபிந்த் கூறினார்.
"இந்த ஆண்டு இறுதிக்குள், மொத்தம் 100 C-CISO சான்றிதழ் பெற்றவர்களை நாங்கள் காண்போம். முன்னோக்கிச் செல்லும்போது, இந்தத் திட்டத்தில் சேர அதிகமானோர் ஆர்வம் காட்டுவதைக் காண்கிறோம். அதன் பிறகு இந்தத் திட்டத்தை மற்ற துறைகளுக்கும் விரிவுபடுத்த விரும்புகிறோம். இதன் மூலம் நமது நாட்டில் இணையப் பாதுகாப்புத் திறமையை மேம்படுத்த முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம்," என்றார் அவர்.
இதனிடையே, 2024-ஆம் ஆண்டு இணையப் பாதுகாப்புச் சட்டம் செயல்படுத்தப்படுவதை ஆதரிக்கும் வகையில், குறிப்பாக நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்பு நிறுவனங்களில் இந்தச் சான்றிதழ் திட்டம் முக்கிய அம்சமாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)