கோலாலம்பூர், 01 ஜூன் (பெர்னாமா) - கடந்த வியாழக்கிழமை தொடங்கி தேசிய இருதய சிகிச்சைக் கழகம் ஐஜேஎன்-இல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த புருணை சுல்தான், சுல்தான் ஹசானால் போல்கியா இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.
அவர் தற்போது கோலாலம்பூரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் இருப்பதாக புருணையின், பிரதமர் துறை இன்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தாலும் புருணை டாருல்சலாம் திரும்புவதற்கு முன்னதாக இன்னும் சில நாட்கள் நாட்டில் தங்கி ஓய்வெடுத்து கொள்ளுமாறு அந்த சிகிச்சை கழக்கத்தின் மருத்துவ நிபுணர்கள் அறிவுரை அளித்துள்ளதாகவும் அப்பதிவில் கூறப்பட்டிருந்தது.
கடந்த மே 26 மற்றும் 27ஆம் ஆகிய தேதிகளில் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அது தொடர்புடைய கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக சுல்தான் ஹசானால் போல்கியா, மே 25ஆம் தேதி மலேசியாவிற்கு வருகை புரிந்திருந்தார்.
சோர்வு காரணமாக மே 27ஆம் தேதி முதல் அவர் IJN-இல் ஓய்வெடுத்து வந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)