கோலாலம்பூர், 01 ஜூன் (பெர்னாமா) - இவ்வாண்டு புத்தகப் பற்றுச்சீட்டு வழங்கும் முயற்சி நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.
மக்களிடையே, குறிப்பாக பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே வாசிப்புப் பண்பை வளர்ப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் தொடர் நடவடிக்கையாக இம்முயற்சி உள்ளது என்று அவர் கூறினார்.
மாணவர்களிடையே வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதிலும், அறிவாற்றலை வளர்ப்பதிலும், ஆசிரியர்களுக்கு பெரும் பங்கு உள்ளதாக டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
''இவ்வாண்டு நாம் அனைத்து ஆசிரியர்களுக்கும் பற்றுச்சீட்டு வழங்கியுள்ளோம். இந்த வாசிப்பு பற்றுச் சீட்டின் உதவியுடன், ஆசிரியர்கள் பொறுப்புடன் செயல்பட்டு மாணவர்களை வாசிக்க வைக்க ஊக்குவிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்,'' என்றார் அவர்.
உயர்கல்வி நிறுவனங்களை உட்படுத்தி, மாணவர்களுக்கு புத்தக பற்றுச் சீட்டுகள் வழங்கும் நடவடிக்கையும் தற்போதுள்ள ஒதுக்கீட்டைப் பயன்படுத்தித் தொடரும் என்று நிதியமைச்சருமான அன்வார் அறிவித்தார்.
இருப்பினும் இம்முயற்சியில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் பரிந்துரைத்திருந்தார்.
தரமற்ற பிரதிகள் கோரப்படுவதையோ அல்லது வாங்குவதையோ தடுக்க, புத்தக பற்றுச் சீட்டுகளை வழங்குவது குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் தேவை என்றும் அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)