விளையாட்டு

ஏப்ரல் மாதத்தின் சிறந்த வீரங்கனையாக சிவசங்கரி தேர்வு

07/05/2024 08:15 PM

கோலாலம்பூர், 07 மே (பெர்னாமா) -- The World Games மூலம் ஏப்ரல் மாதத்தின் சிறந்த வீரங்கனையாக நாட்டின் தேசிய ஸ்குவாஷ் தாரகை எஸ்.சிவசங்கரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

கடந்த மாதம், ஸ்குவாஷ் உலகின் தலைச் சிறந்த வீராங்கனைகளைத் தோற்கடித்து வெற்றியாளர் பட்டத்தைக் கைப்பற்றிய சிவசங்கரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு இந்த அங்கீகரிக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

கடினமான மற்றும் சவாலான சூழ்நிலைகளைக் கடந்து அசாத்திய சாதனையைப் படைத்த சிவசங்கரியின் உழைப்பையும் திறமையை அங்கீகரிக்கும் விதமாக The World Games நிறுவனம் அவரைத் தேர்வு செய்துள்ளது. 

அந்நிறுவனத்தின் முகநூல் பதிவின்படி, உலகத் தரவரிசையில், 13-வது இடத்தில் உள்ள சிவசங்கரி கில்லன் மார்கெட்ஸ் ஸ்குவாஷ் போட்டியில் உலகின் முதல் 10 இடங்களில் உள்ள வீரர்கள் மூவரைத் தோற்கடித்து ஸ்குவாஷ் உலகை அதிர வைத்தார்.

குறிப்பாக, உலகின் முதன்நிலை ஆட்டக்காரரான எகிப்தின் நோர் எல்-ஷெர்பினியை வீழ்த்தி புருவம் உயர்த்த வைத்தார்.

23 வயதுடைய அவர், கடந்த ஈராண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்தில் கடுமையான  காயங்களுக்கு ஆளான வேளையில் நடக்க முடியாது என்ற சூழ்நிலையில் இருந்தார். 

இதனால், 2022 பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் அவர் பங்கேற்க முடியாமல் போனது. 

ஓய்வில் இருந்து, அந்த நெருக்கடியான காலங்களைக் கடந்து சிவசங்கரி மெல்ல மெல்ல ஆட்டங்களில் களமிறங்கினார்.  

இத்துயர்களக் கடந்து உலக அளவில் சாதனை படைத்த அவருக்கு கடந்த சனிக்கிழமை ஏப்ரல் மாதத்தின் சிறந்த வீரங்கனை என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]