செங்டு, 05 மே (பெர்னாமா) -- தோமஸ் கிண்ணத்தை மீண்டும் வெல்வதற்கான மலேசியாவின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், 2018-ஆம் ஆண்டு வெற்றியாளரான சீனாவை தோற்கடிக்க களமிறங்கிய மலேசியா 1-3 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டது.
முதல் ஆட்டத்தில் விளையாடிய தேசிய ஆடவர் ஒற்றையர் விளையாட்டாளர் லி சி ஜியா 21-19 21-5 என்று தோல்வி கண்டாலும், இரண்டாம் ஆட்டத்தில் களமிறங்கிய ஆடவர் இரட்டையர் ஜோடி ஆரோன் சியா - சோ வுய் இக் 15-21, 21-12, 21-17 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், மலேசியாவின் லியோங் ஜுன் ஹாவ் தோல்வி கண்டதால், நூர் இஸ்சுடின் - சே ஃபெய் ஜோடியின் வெற்றியை மலேசிய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.
இருப்பினும், சீன விளையாட்டாளர்கள் திறமையாக விளையாடி மலேசியாவின் பயணத்தை முடித்து வைத்தனர்.
இறுதி ஆட்டத்தில், உபசரணை நாடான சீனா, இந்தோனேசியாவுடன் மோதவுள்ளது.
1992-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற போட்டியில், மலேசியா இறுதியாக தோமஸ் கிண்ணத்தை வென்றிருந்தது.
அதன் பின்னர், அக்கிண்ணத்தை மீண்டும் வெல்வதற்கான மலேசியாவின் கனவு இன்னும் ஈடேறவில்லை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)