ஒடென்ஸ், 16 அக்டோபர் (பெர்னாமா) -- டென்மார்க் பொது பூப்பந்து போட்டியில், நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், தனது அபார திறமையை வெளிப்படுத்திய இந்தியாவின் கிடாம்பி ஶ்ரீகாந்த் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கிறார்.
33 நிமிடங்கள் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-15, 21-14 என்ற புள்ளிகளில் கனடாவின் ஜெசேன் அந்தோணி ஹொசு-வை தோற்கடித்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்.
இதனிடையே, பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற ஜப்பானின் நோசுமி ஒக்குஹரா, 21-6, 21-12 என்ற புள்ளிகளில், வேல்ஸ்-சைச் சேர்ந்த ஜோர்தான் ஹர்ட்டை தோற்கடித்து காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
31 நிமிடங்கள் மட்டுமே நீடித்த மற்றொரு ஆட்டத்தில், ஒலிம்பிக் வெற்றியாளர் கெரோலினா மரின், உபசரணை நாட்டின் லைன் கிரிஸ்தோபெர்சென்னை 21-14, 21-8 என்ற புள்ளிகளில் தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்.
உலகின் முதல் நிலை ஜோடியான ஜப்பானின் யுக்கி ஃபுக்கோஷிமா,ஷகா ஹிரோதா ஜோடி, ஜெர்மனியின் லினா எஃபிலேர், இசாபெல் ஹெத்ரிச் ஜோடியை 21-12, 21-13 என்ற புள்ளிகளில் தோற்கடித்திருக்கின்றனர்.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை