பொது

கொவிட்-19: 5,738 புதிய சம்பவங்களுடன் 60 மரணங்கள் பதிவு

17/06/2021 07:50 PM

புத்ராஜெயா, 17 ஜூன் (பெர்னாமா) -- நாட்டில் இன்று நண்பகல் 12 மணி வரையில் ஐயாயிரத்து 738 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

அதோடு, 60 பேர் அப்பெருந்தொற்றுக்கு பலியாகியிருப்பதைத் தொடர்ந்து, நாட்டின் மொத்த மரண எண்ணிக்கை, நான்காயிரத்து 202 -ஆக அதிகரித்திருப்பதாக, சுகாதாரத் தலைமை இயக்குநர், டான் ஶ்ரீ டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

இன்று பதிவாகிய புதிய சம்பவங்களில், 5,735 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியது என்றும், எஞ்சிய 3 சம்பவங்கள் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களை உட்படுத்தியது டான் ஶ்ரீ டாக்டர் நோர் தெரிவித்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கொவிட்-19 நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 66 ஆயிரத்து 097-ஆக பதிவாகியுள்ளது.

அதில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 909 பேரில், 441 பேருக்கு சுவாச உதவி கருவி பொருத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இன்று 7,530 பேர் அப்பெருந்தொற்றிலிருந்து குணமடைந்திருக்கின்றனர்.

-- பெர்னாமா