உலகம்

ஈராக் தற்கொலை தாக்குதலில் 32 பேர் பலி; 110 பேர் காயம்

22/01/2021 05:42 PM

ஈராக், 22 ஜனவரி (பெர்னாமா) -- ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள இரு வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில் இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 110 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.

டயாரன் சதுக்கம் அருகே உள்ள மக்கள் நெரிசல் மிகுந்த சந்தை பகுதியில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்றாலும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என்று ஈராக் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ஈராக்கில் நடந்த முதலாவது தற்கொலைப்படை தாக்குதல் இதுவாகும் என்று உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து மூன்று ஆண்டுகளாகப் பெரிய அளவில் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-- பெர்னாமா