கோலாலம்பூர், 25 நவம்பர் (பெர்னாமா) -- கோலாலம்பூர், லபுவான், நெகிரி செம்பிலான், பினாங்கு மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் பணி புரியும் அனைத்து அந்நிய நாட்டவர்களும் கட்டாயம் கொவிட்-19 பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும்.
இப்பரிசோதனை அமல்படுத்தத் தொடங்குவதற்கான தேதி குறித்து தேசிய பாதுகாப்பு மன்றம் விரைவில் அறிவிக்கும் என்று மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
இது குறித்து கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
சமூக பாதுகாப்பு அமைப்பான, பெர்கேசோவின் உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் பணி புரியும் அந்நிய நாட்டினர் ஆகியோர் பெர்கேசோ பரிவுமிக்க பரிசோதனை திட்டத்தின் கீழ் கொவிட்-19 சுகாதார பரிசோதனைக்கு தகுதிப் பெற்றிருக்கின்றனர்.
பெர்கேசோ சுகாதாரப் பரிசோதனை திட்டத்தில் பதிவுப் பெற்ற கிளினிக் அல்லது மருத்துவமனைகளில் நோய் எதிர்ப்பு சக்தி சுகாதாரப் பரிசோதனையை மேற்கொள்ளலாம்.
பெர்கேசோவிடமிருந்து பி.எஸ்.பி. பெர்கேசோ உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர், முன்னதாக பரிசோதனைக்கான கட்டணத்தை முதலாளிகள் செலுத்த வேண்டும் என்று சரவணன் கூறினார்.
அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஊழியருக்கும் ஒரு முறை மட்டுமே கொவிட்-19 நோய்க்கான பரிசோதனையை மேற்கொள்ள 60 ரிங்கிட் வரை உதவித் தொகை வழங்கப்படும்.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை