BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
பொது

இன்று மேலும் மூன்று கொவிட்-19 திரள்கள் பதிவு

22/11/2020 08:08 PM

புத்ராஜெயா, 22 நவம்பர் (பெர்னாமா) -- நாட்டில் இன்று மேலும் மூன்று திரள்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தி இருக்கிறது.

பெங்காலான் பாராட், பக்தி, பாயாம் இண்டா ஆகியவையே அந்த மூன்று திரள்கள் ஆகும் என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

பினாங்கின்  பாராட் டாயா மாவட்டம், கோலகங்சாரின் கெரியான் மாவட்டம் மற்றும் பேராவின் கிந்தா மாவட்டத்தை உட்படுத்தி, பெங்காலான் பாராட் திரள் உருவாகி இருப்பதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டாக்டர் நோர் ஹிஷாம் குறிப்பிட்டார்.

கடந்த நவம்பர் 10 ஆம் தேதி, வேலையிடத்தில் மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 சுகாதார சோதனையின் போது, அத்திரளை உட்படுத்திய முதல் சம்பவம் அடையாளம் காணப்பட்டது.

அத்திரள் தொடர்பில், நவம்பர் 22-ஆம் தேதி வரையில், 251 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சுகாதார பரிசோதனையில், 19 கொவிட்-19 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

நெகரி செம்பிலான், சிரம்பான் மாவட்டத்திலுள்ள சிறைச்சாலை ஒன்றை உட்படுத்தி பக்தி திரள் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

அச்சிறைச்சாலை அனுப்பட்ட கைதி ஒருவரிடமிருந்து அத்திரள் உருவாகி இருப்பதாக டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

இதன் தொடர்பில், 481 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 16 பேருக்கு அப்பெருந்தொற்று தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

கெடா, கூலிம் மற்றும் கோல மூடா மாவட்டத்தை உட்படுத்தி அடையாளம் காணப்பட்டிருக்கும் திரளில், இதுவரை 10 சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன.

இன்று பதிவாகிய மூன்று திரள்களைச் சேர்ந்து, நாட்டில் மொத்தம் 167 திரள்களில் நோய் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில், இன்று நிறைவடைந்த நான்கு திரள்களுடன் சேர்த்து, மொத்தம் 163 திரள்கள் நிறைவடைந்திருக்கின்றன.

-- பெர்னாமா