பொது

ரூமா முரா கெபாயானில் தீ; ஒருவர் கருகி மரணம்

12/10/2020 02:26 PM

கோத்தா கினாபாலு, 12 அக்டோபர் (பெர்னாமா) - லோரோங் பாதுமா 7 மற்றும் ரூமா முரா கெபாயான் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் இரண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உடல் கருகி மரணம்; இருவருக்குச் சிறு தீக்காயங்கள் ஏற்பட்டன.

மலேசிய அவசரநிலை பதில் சேவைகள் 999 (MERS 999) மூலம் சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நள்ளிரவு 12:24 மணிக்கு தீ விபத்தைப் பற்றி அவசர அழைப்பு வந்தது.

கோத்தா கினாபாலு தீயணைப்பு மற்றும் மீட்புப்படை நிலையத்தைச் சேர்ந்த இரண்டாவது மூத்த தீயணைப்பு அதிகாரி, இடி நிர்வான் ஐயாஸ் தலைமையில் 31 தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

பின்னிரவு 1.28 மணியளவில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு,  2.56 மணிக்கு தீயணைப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.

விபத்தின்போது தங்களை காப்பாற்றிக் கொள்ள முயற்சித்த 3 வயது சிறுவனும் 32 வயது நிரம்பிய அச்சிறுவனின் தாயாரும் சிறு தீக்காயங்களுக்கு உள்ளாகினர்.

மேலும், 65 வயதான லியூ ஹான் சோங் என்ற ஆடவர் ஒருவர் தனது வீட்டின் இரண்டாம் மாடியில் உள்ள கழிவறையில் உடல் கருகி மாண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 
 
தீ விபத்திற்கான காரணம் மற்றும் சேதத்திற்கான மதிப்பீடு குறித்து, சபா தீ விபத்து புலனாய்வுப் பிரிவு, JBPM விசாரித்து வருகின்றது.

- பெர்னாமா