பொது

போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் முற்றுகை - மூவர் கைது

25/09/2020 10:05 PM

புக்கிட் மெர்தாஜாம், 25 செப்டம்பர் (பெர்னாமா) -- பினாங்கு புக்கிட் மெர்தாஜாமிலுள்ள ஒரு சொகுசு அடுக்ககத்தின் பின் புறத்தில் செயல்பட்டு வந்த போதைப்பொருள் தயார் செய்யும் கூடத்தை கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் சோதனையிட்டனர். 

அக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது ஆண்கள் மூவர் கைது செய்யப்பட்டதோடு, ஐந்து லட்சம் ரிங்கிட் மதிப்புடைய பல்வேறு போதை பொருட்களையும் போலீசார் கைப்பற்றியதாக மாநில போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைப் பிரிவு தலைவர் ஏ.சி.பி. முஸ்தபா கமால் கனி அப்துல்லா தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட அந்த போதைப் பொருள் விநியோகிப்பாளர்கள் கடந்த மூன்று மாதங்களாக அந்த அடுக்குமாயில் குடியிருந்து வந்துள்ளனர். 

அமலாக்க அதிகாரிகளின் பார்வையிலிருந்தும் கண்காணிப்பிலிருந்தும் தப்பித்துக் கொள்வதற்காகவே அவர்கள் இங்கு தங்கியிருக்கும் என்று நம்பப்படுவதாக முஸ்தபா கமால் கூறினார். 

அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் அனைத்தும் சுமார் 85 போதைப் பித்தர்கள் பயன்படுத்தக்கூடிய அளவிலானது. 

கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் வரும் திங்கட்கிழமை முதல் தடுப்புக் காவலில் வைக்கப்படுவர். 

ஆபத்தான தடுப்பு மருந்து சட்டம் எல்.எல்.பி.கே 1985இன் பிரிவு 3 (1) மற்றும் ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952இன் பிரிவு 39 பி மற்றும் துப்பாக்கிச் சட்டம் 1960இன் பிரிவு 8 ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் முஸ்தபா கூறினார். 

--பெர்னாமா