BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
பொது

ஊதிய உதவித்தொகை நிதியை தவறாக பயன்படுத்தும் நிறுவனங்களின் பெயர் கருப்புப் பட்டியலிடப்படும்

25/09/2020 09:32 PM

ஜோகூர் பாரு, 25 செப்டம்பர் (பெர்னாமா) --  ஊதிய உதவித்தொகை நிதியை தவறாக பயன்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் முதலாளிகளின் பெயரை, அரசாங்கம் கருப்புப் பட்டியலிடவிருக்கிறது. 

முதலாளிகள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கத் தவறுவது குறித்து, தங்கள் தரப்புக்கு புகார் கிடைத்ததைத் தொடர்ந்து, மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். 

கருப்புப் பட்டியலிடப்படுவதைத் தவிர்த்து, இந்த திட்டத்தில் கலந்துக் கொள்ள போலி ஆவணங்களைப் பயன்படுத்துவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட முதலாளி மீது நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று டத்தோ சரவணன் தெரிவித்தார். 

''சில நிறுவனங்கள் போலியான எஸ்.எஸ்.எம் ஆவணங்களை வழங்குகின்றன. 14,800 ஊழியர்களையும் மூன்று கோடியே 10 லட்சம் கோரிக்கையையும் உட்படுத்திய 1663 நிறுவனங்கள் போலியான தகவலை வழங்கின. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு நடப்பில் இருக்கும் விதிமுறையும் பயன்படுத்தப்படுகிறது.'' என்று அவர் கூறினார்.

ஜோகூர் பாருவில், வெள்ளிக்கிழமை, PENJANA திட்டத்தின் மனிதவள மேம்பாட்டு நிதி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரவணன் இவ்வாறு கூறினார். 

இந்த கடினமான காலக்கட்டத்தில், மக்களுக்கு உதவ அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் இதுபோன்ற முயற்சிகளில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் சரவணன் நினைவுறுத்தினார். 

கொவிட்-19 நோய்க் காரணமாக நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, பொருளாதார மீட்பு நிலையை எதிர்நோக்கி வரும் இக்காலக்கட்டத்தில், முதலாளிகள் மற்றும் ஊழியர்களின் சுமையைக் குறைக்க ஏப்ரல் முதலாம் தேதி தொடங்கி ஊதிய ஊக்குவிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

--பெர்னாமா